டில்லி

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நிதி ஆயோக் கலைக்கபடும் என அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆட்சியில் திட்டக் கமிஷன் என்னும் பெயரில் இயங்கி வந்த ஆணையம் பாஜக பதவிக்கு வந்ததும் கலைக்கப்பட்டது. அந்த ஆணையத்துக்கு பதிலாக நிதி ஆயோக் என்னும் பெயரில் புதிய குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்தக் குழு அரசின் சொற்படி செயல்படுவதாகவும் ஒரு தனித்தன்மை இன்றி உள்ளதாகவும் கூறப்பட்டது.

எதிர்க்கட்சிகளிடையே இந்த நிதி ஆயோக் செயல்பாட்டுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இது குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் ராகுல் காந்தி, “காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நிதி ஆயோக் கலைக்கப்படும். அந்தக் குழுவினால் பிரதமரின் செய்கையை பிரசாரம் செய்வதும் மற்றும் தவறான விவரங்களை தரும் பணி மட்டுமே நடைபெற்று வருகிறது. வேறு ஒன்றும் பயனுள்ள பணிகள் நடைபெறுவதில்லை.

காங்கிரஸ் ஆட்சியில் முன்பு போல மீண்டும் திட்டக் கமிஷன் என்னும் ஆணையம் அமைக்கப்படும். அந்த ஆணயத்தில் புகழ்பெற்ற பொருளாதார நிபுணர்கள் உள்ளிட்டவர்கள் சேர்க்கப்படுவார்கள். அந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 100க்குள் இருக்கும்” என தெரிவித்துள்ளார்.