டலூர்

காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் குடியுரிமை சட்டம் திருத்தப்படும் எனத் தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

குடியுரிமை சட்டத் திருத்தம் மசோதாவாக இருந்ததில் இருந்தே காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.   அந்த திருத்தம் நாடாளுமன்ற இரு அவைகளிலும் இயற்றப்பட்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்குப் பிறகு சட்டமாக இயற்றப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத்துக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு எழுந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

நேற்று கடலூரில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களிடம், “காங்கிரஸ் ஆட்சியில் குடியுரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டாலும் அதில் ஏராளமான மாற்றங்களை பாஜக கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளது.  அத்துடன் குடியுரிமைச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவை ஒன்றுக்கு ஒன்று  தொடர்புடையவை ஆகும்.

இவற்றின் மூலமாகக் குறிப்பிட்ட சிலரை மட்டும் இந்தியக் குடிமகன் கள் இல்லையென அறிவித்து வெளியேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

நாட்டின் பொதுமக்களை அடையாளம் தெரிந்துக் கொள்ள ஆதார் போதுமானது

அஸ்ஸாமில் இச்சட்டத்தால் 19 லட்சம் பேர் குடியுரிமையை இழந்துள்ளனர்.   புதிய குடியுரிமை சட்டத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தால் திருத்தம் கொண்டு வரப்படும்,  ஏற்கனவே பீகார், மேற்குவங்கம், பஞ்சாப், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அம்மாநிலங்களை மத்திய அரசு என்ன செய்தது?

அப்படி இருக்கக் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினால், தமிழக அரசை மத்திய அரசு கலைத்து விடும் என்று பாஜக நிர்வாகி எச்.ராஜா ஒரு பேட்டியில் கூறியிருப்பதன் பின்னணி என்ன என்பதை அரசு விளக்க வேண்டும்.   அதிமுக இதுகுறித்து  கருத்து தெரிவிக்காமல் மவுனம் காப்பது ஏன்? .

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவிடத்தில் அவரை தரக்குறைவாக விமர்சித்து வீடியோ பதிவிட்ட நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி மீது தமிழக அரசு வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.  அந்த கட்சியின் தலைவர் சீமான் மக்களிடையே வெறுப்பு அரசியலைப் பரப்பி வருவதன் விளைவே இது போன்ற வீடியோக்கள் ஆகும்.

மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்பனை செய்தால் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும்,  அத்துடன்  ஏழை, நடுத்தர மக்களும் கடுமையான பாதிப்பினை சந்திப்பார்கள்” என்று தெரிவித்தார்.