சென்னை

மல் படங்களில் பணிபுரிந்ததற்கு பணம் வரவில்லை என சொன்ன கவுதமிக்கு ஆதாரங்களை அளித்தால் பணம் தர தயாராக இருப்பதாக ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் பதில் அளித்துள்ளது.

நடிகை கவுதமி தனது கணவரைப் பிரிந்த பின் பத்தாண்டுகளாக கமலஹாசனுடன் வாழ்ந்து வந்தார்.   கடந்த 2016ஆம் ஆண்டு கவுதமி கமலைப் பிரிந்து தனியே வாழத் தொடங்கினார்.   இவர்களிருவரும் மீண்டும் இணயப்போவதாக வந்த செய்திகளை கவுதமி மறுத்தார்.

கவுதமி, “நானும் கமலும் இணைந்து வாழப்போவதாக வந்த செய்தி தவறானது.   நான் அவரைப் பிரிந்த பிறகு எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை.   எங்கள் பிரிவுக்கு கமலஹாசன் மகள்கள் காரணம் இல்லை.    எனது மகளின் பாதுகாப்பான வாழ்க்கைக்காக நான் கமலஹாசனை பிரிந்தேன்.   எனக்கும் என் குழந்தைக்கும் இப்போது பொருளாதார ரீதியாக ஒரு ஸ்திரத்தன்மை தேவைப்படுகிறது.

கமலுடன் நான் இருந்த போது கமலஹாசனின் ராஜ்கமல் நிறுவனம்,   மற்றும் விஸ்வரூபம், தசாவதாரம் ஆகியபடங்களில் உடை வடிவமைப்பாளராக பணியாற்றினேன்.   அதற்காக எனக்கு வரவேண்டிய பணம் பாக்கி உள்ளது.  பலமுறை நினைவு படுத்தியும் எனக்கு வர வேண்டிய பணம் வரவில்லை.   இதனால் எனக்கு பொருளாதார ரீதியாக கடும் பாதிப்பு உண்டாகி உள்ளது”  என கூறினார்.

இதைத் தொடர்ந்து கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம், ”கமல் நடித்த தசாவதாரம் திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கும், விஸ்வரூபம் படத் தயாரிப்பாளர் பிவிபி சினிமாஸ் நிறுவனத்தாருக்கும் இடையில் கவுதமிக்கு ஊதியப் பிரச்னை இருந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பு இல்லை.

திரைப்படங்களில் வேலை செய்யும் போது நடிகர்கள் உட்பட அனைத்து கலைஞர்களிடமும் ஊதியம் குறித்து ஒப்பந்தம் போடப்படும்.  அதன் பிறகு தான் பட வேலைகள் தொடங்கப்படும்.

ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்த படங்களில் பணி புரிந்த கவுதமிக்கு அனைத்து ஊதியமும்  ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது.   ஆனால் அதே நேரத்தில் நாங்கள் பணம் தரவேண்டும் என்பதற்கு கவுதமியிடம் ஆதாரம் இருந்தால் அதை கொடுக்கலாம்.   நாங்கள் பணம் தர தயாராக உள்ளோம்,”  என பதில் அளித்துள்ளது.