சென்னை:

பிறமொழி பேசும் மக்கள் மீது இந்தி திணிக்கப்பட்டால் அது நாட்டை பிளவுபடுத்தி விடும் என்று பாஜக முன்னாள் தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித்ஷாவின் கருத்துக்கு பாமக தலைவர்  ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

செப்டம்பர் 14-ம் தேதியான  இன்று, இந்தி மொழி அதிகாரப்பூர்வ மொழியாக அங்கீகரிக்கப்பட்ட நாளாக வட மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது. இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள அமித்ஷா, இந்தியாவின் அடையாளமாக ஒருமொழிதான் இருக்க வேண்டும் என்பது முக்கியம். இன்றுள்ள நிலையில், நாட்டில் உள்ள அனைவரையும் ஒரு மொழியால் ஒருங்கிணைக்க முடியும் என்றால் அது அதிகமான மக்களால் பேசப்படும் இந்தி மொழியால் மட்டுமே முடியும் என்று தெரிவித்து உள்ளார்.

அமித்ஷாவின் கருத்துக்கு திமுக உள்பட அனைத்து தமிழக அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. இந்த நிலையில், பிறமொழி பேசும் மக்கள் மீது இந்தியை திணிக்கக் கூடாது என பாமக தலைவர்  ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது கருத்தை டிவிட்டர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள ராமதாஸ்,   “இந்தியாவின் ஒற்றை மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்து தவறானது. இந்தி மொழி நாளில் இந்தியை உயர்த்திப் பேச அவருக்கு உரிமை உண்டு. ஆனால், பிற மொழி பேசும் மக்கள் மீது இந்தியை திணிக்கக் கூடாது.

உலக அரங்கில் இந்தியாவின் அடையாளமாக இந்தி ஒருபோதும் திகழ முடியாது. இந்தியாவுக்கு இந்தியை அடையாளமாக்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு உள்ளிட்ட பிற மொழி பேசும் மாநிலங்களின் அடையாளங்களை பறிக்க முயல்வது கண்டிக்கத்தக்க செயல் தானே?

இந்தியாவில் அதிகம் பேரால் பேசப்படும் மொழி என்பதாலேயே இந்தி அனைத்து மக்களையும் ஒருமைபடுத்தி விடாது. பிறமொழி பேசும் மக்கள் மீது இந்தி திணிக்கப்பட்டால் அது நாட்டை பிளவுபடுத்தி விடும். உலகின் பல நாடுகளில் இதற்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளன.

இவ்வாறு தெரிவித்து உள்ளார்.