மும்பை: இந்திய அணிக்காக டி-20 போட்டிகளில் விளையாட விரும்புவதாக தெரிவித்துள்ளார் அணியில் இடம் கிடைக்காத ஹர்பஜன்சிங்.
ஐபிஎல் போட்டிகளில் தன்னால் சிறப்பாக செயல்பட முடிந்தால், இந்திய அணிக்காகவும் தன்னால் சிறப்பாக செயல்பட முடியும்தானே! என்று லாஜிக் பேசியுள்ளார் அவர்.
ஒரு நேர்காணலில் அவர் கூறியுள்ளதாவது, “நான் தயாராக இருக்கிறேன், ஐபிஎல் கிரிக்கெட்டில் நன்றாக வீச முடிகிறது எனில், பந்து வீச்சாளர்களுக்கு சவால் நிறைந்த ஐபிஎல் தொடரில் நான் சிறப்பாக வீச முடிகிறதெனில், சர்வதேச கிரிக்கெட்டிலும் வீச முடியும்தானே..!
நான் ஐபிஎல் தொடரில் பவர் ப்ளேயில் வீசியும், மிடில் ஓவர்களை வீசியும் விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளேன்.
ஐபிஎல் தொடரைப் போன்று, சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து அணிகளிலும் பிரமாதமான வீரர்கள் இருக்க மாட்டார்கள். ஒவ்வொரு அணியிலும் டாப் 6 வீரர்கள் திறன்மிகுந்து இருப்பார்கள்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் நான் டேவிட் வார்னரையோ, ஜானி பேர்ஸ்டோவையோ வீழ்த்த முடியும் என்றால், சர்வதேச கிரிக்கெட்டில் அவர்களை வீழ்த்த முடியாது என்றா நினைக்கிறீர்கள்?
ஆனால், இந்திய அணியில் இடம்பெறுவதென்பது என் கைகளில் இல்லை. அதேசமயம், இப்போதைய இந்திய கிரிக்கெட் அமைப்பில் யாரும் உங்களிடம் இதைப்பற்றி பேசக்கூட மாட்டார்கள்” என்றார் ஹர்பஜன் சிங்.