யாரையாவது பிடிச்சி காறித்துப்பிகிட்டே இருக்கணும். இதுதான் தீவீர இந்துத்துவாக்களுக்கு முக்கிய குறிக்கோள்.

கோவிலைப்பற்றியோ ஏதாவது இந்து கடவுகள்களை பற்றியோ கொஞ்சம் உரசியபடி பேசினால்போதும், உடனே அதை எப்படியாவது பெரியதாக்கி சாதுவாக இருக்கிற இந்துக்களையும் தூண்டிவிடவேண்டும், குளிர்காய வேண்டும் அவ்வளவுதான் அவர்களின் ஒரே லட்சியம்.

இப்படிப்பட்ட சூழலில் இந்த கோஷ்டிகளிடம் அண்மையில் சிக்கியிருப்பவர் பிரபல நடிகையும், நடிகர் சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா. பழம்பெரும் நடிகர் சிவகுமார் குடும்பத்து மூத்த மருமகள்.

தமிழ் ரசிகர்கள் மற்றும் ரசிகைகள் மத்தியில் ஜோ என்று செல்லமாக அழைக்கப்படும் பெருமைக்குரியவர் நடிகை ஜோதிகா. சுட்டிப்பெண் ரோல்களில் நடித்து நல்லபெயர் வாங்கிய அவர், திருமணமாகி குழந்தைகளை பெற்று குடும்பம் நடத்திவரும் நிலையில், தொடர்ந்து பேசப்படக்கூடிய அறிவு முதிர்ச்சியான பாத்திரங்களில் நடித்துவருகிறார். அவற்றிற்கு நல்ல வரவேற்பும் கிடைத்துவருகிறது.

இத்தகைய சூழலில்தான் அண்மையில் தொலைக்காட்சி ஷோ ஒன்றில் தனது கருத்துக்களை முன்வைத்தார். உடனே அவர் தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்டதே வீண் என்று பேசியதாக பொங்க ஆரம்பித்துவிட்டார்கள், இந்துத்துவா குரூப்பில் ஒரு பிரிவினர்.

சமூக வலைகத்தளங்களில் சகட்டுமேனிக்கு விமர்ச்சிக்கப்பட்டார் ஜோதிகா, சிவக்குமார் குடும்பத்தை பல தலைமுறைக்கு தோண்டியெடுத்து திட்டி வருகிறார்கள். எல்லாவற்றையும்விட வடநாட்டில் இருந்து வந்தேறிய ஜோதிகா ஒரு வேசி என்றே பட்டம் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

சரி அப்படித்தான் என்னதான் ஜோதிகா பேசினார்? அவர் பேச்சு இதோ…
‘’தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் அவ்வளவு அழகா இருக்கும்

போய்_பாருங்க என்று சொன்னார்கள். ஏற்கனவே பார்த்திருக்கேன். மறுநாள் அரசு மருத்துவமனையில் படப்பிடிப்பு இருந்தது..

அங்கே நான் கண்டதை வாயால் சொல்ல முடியாது.. அவ்வளவு மோசமான பராமரிப்பு. அன்று நான் மருத்துவமனையை பார்த்து விட்டு கோவிலுக்கு செல்லவில்லை..

கோவில்களை பராமரிக்க, பெயிண்ட் அடிக்க லட்சக்கணக்கில் செலவு பண்றீங்க, கோவில் உண்டியலில் காசு போடுறீங்க,என்னுடைய வேண்டுகோள்.

அதே அளவு பணத்தை அரசு பள்ளிக்கும் மருத்துவமனைக்கும் கொடுங்கள் என்பது மட்டுமே. பள்ளிக்கூடங்களும் மருத்துவமனைகளும் அவ்ளோ முக்கியம்’’

இவ்வளவுதான் ஜோதிகா பேசியது.. அதாவது கோவில் எப்படி முக்கியமோ அதேபோல பள்ளிக்கூடங்களும் மருத்துவமனைகளும் அவ்வளவு முக்கியமானவை. அதனால் கோவில்களுக்கும் செலவு செய்வது போல் அரசு பள்ளி, மருத்துவமனைகளுக்கும் செலவு செய்யுங்கள் என்பதே அதன் அர்த்தம்.

நமது கேள்வியெல்லாம், ஜோதிகாவை வேசி, பரத்தை, மானங்கெட்டவள், பஞ்சம் பிழைக்கவந்தவள், வடநாட்டுக்காரி என்றெல்லாம் சொல்லிவிட்டார்கள், சொல்லிக்கொண்டும் இருக்கிறார்கள். அப்படியானால் இதைபாடிய நமது தேசியக்கவி மகாகவி பாரதியை என்ன சொல்வார்கள்?

“அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்,
ஆலயம் பதினாயிரம் நாட்டல்,
பின்னருள்ள தருமங்கள் யாவும்,
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்,
அன்னயாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்”

– வி.பி. லதா