ஜெனிவா

ந்தியாவில் ஊரடங்கு தளர்த்தப்பட்டால் கொரோனா பாதிப்பு அபாய கட்டத்தை அடையும் என உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.

உலகெங்கும் கொரோனா பாதிப்பு அதிக அளவில் உள்ளது.  இதில் இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.   இதுவரை இந்தியாவில் 2.57,486 பேருக்கு கொரோனா  பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.   இதில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மிக அதிகமாகவும் அடுத்ததாகத் தமிழகத்திலும் பாதிப்பு உள்ளது.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு கடந்த மார்ச் 25 முதல் ஊரடங்கை அமல்  படுத்தி உள்ளது.   ஆயினும் கொரோனா கட்டுக்குள் வரவில்லை.  மாறாக நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.   இந்நிலையில் தற்போதைய ஊரடங்கில் பல விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன.  அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்டவை கட்டுப்பாடுகளுடன் இயங்க தொடங்கி உள்ளன.

உலக சுகாதார மையத்தைச் சேர்ந்த மைக்கேல் ரியான், “இந்தியாவைப் பொறுத்த வரை கொரோனா பாதிப்பு அதிவேகமாக இல்லை எனினும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.   அத்துடன் இந்த தாக்கம் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களுக்கு இடையில் வேறுபட்டுள்ளது.   இவ்வாறு இருக்கையில் இந்தியாவில் ஊரடங்கு தளர்த்தப்பட்டால் கொரோனா பாதிப்பு அபாய கட்டத்தை அடையும்” என எச்சரித்துள்ளார்.