டில்லி,

ரசு ஊழியர்கள் ரத்த தானம் செய்தால் அவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுவதாக மத்திய பணியாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மருத்துவமனையில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு அவசர தேவைக்காக ரத்ததானம் செய்யும் அரசு ஊழியர்களுக்கு தற்போது விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொழிலாளர் நலத்துறையின் சேவை விதிகளின்படி கொடுக்கப்டுகிறது. இந்நிலையில், ரத்ததானம் மட்டுமல்லாமல்,  ரத்தத்தின் பகுதிப்பொருட்களான சிவப்பு அணுக்கள், பிளாஸ்மா, நுண்தட்டுக்கள் (Platelets) தானம் செய்பவருக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படும் என்று தற்போது அறிவிப்பாணை வெளியிடப்பட்டு உள்ளது.

இதுகுறித்து அரசாணையில் கூறியிருப்பதாவது,  மத்திய அரசு ஊழியர்கள், வேலைநாளில், அங்கீகரிக்கப்பட்ட ரத்தவங்கிகளில் ரத்த தானம் அல்லது ரத்தத்தின் பகுதிப்பொருட்கள் தானம் செய்ததற்கான ஆதாரத்தை அளித்தால், அன்றைய நாளை, சிறப்பு சாதாரண விடுமுறையாக கருதி, அவர்களுக்கு அன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படும்.

தகுந்த ஆதாரங்களை சமர்ப்பித்து, ஆண்டிற்கு 4 முறை, அவர்கள் இந்த சலுகையை பெற முடியும்.

இவ்வாறு பணியாளர் அமைச்சக உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.