சென்னை:
சாத்தான்குளம்  தந்தை மகன் கொலை வழக்கை தமிழக அரசு முறையாக விசாரிக்காவிட்டால் சி.பி.ஐ விசாரணை கோருவோம்” என்று எதிர்க்கட்சித்தலைவரும், திமுக தலைவருமான  மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் போலிஸாரால் விசாரணைக்கு அழைத்துச் செய்யப்படு கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனமான  தாக்குதல் காரணமாகவே அவர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

எடப்பாடி அரசின் அராஜக போலிஸார் நடத்திய இந்த வெறியாட்டம் தமிழக மக்கள்மட்டுமில்லாத நாடு முழுவதும் உள்ள மக்களிடையே  கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்துக்கு ஆளாகி உள்ளது.

இந்தநிலையில், தமிழக எதிர்க்கட்சியான தி.மு.க, குற்றவாளிகளுக்கு மிகக் கடுமையான தண்டனைகள் அளிக்கப்படவேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என அரசை வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், சாத்தான்குளம் இரட்டைக் கொலை விவகாரத்தில் முறையான விசாரணை இல்லையென்றால் சி.பி.ஐ விசாரணை கோரி வழக்குத் தொடர்வோம் என எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது,

“சாத்தான்குளத்தில் கொலை செய்யப்பட்ட இருவரது போஸ்ட்மார்ட்டம் அறிக்கை வராத நிலையில் பென்னிக்ஸ் மூச்சுத்திணறலில் இறந்தார் என்றும், அவரது தந்தை ஜெயராஜ் உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தார் என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எதன் அடிப்படையில் சொன்னார்?
தவறு அரசின் பக்கம் என்றுதானே அ.தி.மு.க சார்பில் ரூ.25 லட்சம் கொடுத்தீர்கள்? இயற்கையான மரணம் என்றால் கொடுத்திருப்பீர்களா?
காவல் நிலையத்தை சாத்தான் வேட்டைக்காடாக மாற்றியவர்களை கொலை வழக்கில் கைது செய்திடுக
ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் கொலை வழக்கை தமிழக அரசு முறையாக விசாரித்து ஒழுங்காக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சி.பி.ஐ விசாரணை கேட்டு தி.மு.க வழக்குத் தாக்கல் செய்யும்!”
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.