டெல்லி

இந்தியர்கள் ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இருந்தால் இந்தியா பாதுகாப்பாக இருக்கும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவக் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் 8350 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு சூழலில் மக்கள் அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக இருந்து நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

இது குறித்து சேவக் தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

“நீங்கள் வீட்டை விட்டு வராததும், ஷாப்பிங் செய்யாததும், காலை வாக்கிங் செல்லாததும் உங்களுக்கு பெரிய பிரச்சனை என்றும், கடினமானது என்றும் நினைக்கிறீர்களா?

அப்படியானால் நம்மை காப்பதற்காக தங்களது வாழ்க்கையை பொருட்படுத்தாது பெரும் சவால்களுக்கு இடையிலும் சேவையாற்றி வரும் மருத்துவ பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர், அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் பணியாளர்கள் உள்ளிட்டோரின் நிலை எத்தகையது என சிந்திப்போம்.   அவர்களுக்கு உளப்பூர்வமான நன்றியைத் தெரிவிப்போம்.  நாம் பாதுகாப்பாக இருப்பதன் மூலம் வீட்டிலேயே இருப்பதன் மூலம் நம் நன்றியை அவர்களுக்கு உரித்தாக்குவோம்.

நீங்கள் பாதுகாப்பாக இருந்தால் இந்தியா பாதுகாப்பாக இருக்கும். எனவே மத்திய மாநில அரசுகளின் ஊரடங்கை மதித்து வீட்டிலேயே இருங்கள்” என சேவக் கேட்டுக் கொண்டுள்ளார்.