பெரம்பலூர்:

டந்த தேர்தலின்போது, சேராக்கூடாத இடத்தில் சேர்ந்து போட்டியிட்டதால் தேர்தலில் தோல்வி அடைந்தேன் என்று இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரிவேந்தர் பச்சமுத்து கூறினார்.

பாராளுமன்ற தேர்தலையடுத்து, தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி இணைந்துள்ளது. அந்த கட்சிக்கு பெரம்பலூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் கட்சியின் தலைவர் பாரிவேந்தர் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் இன்று பெரம்பலூரில் பாரிவேந்தரின் வேட்பாளர்  அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய பாரிவேந்தர், பெரம்பலூர் எனது மூதாதையர்கள் வாழ்ந்த இடம் என்றும்,இந்தத் தொகுதிக்கு நான் புதியவன் அல்ல. என்னுடைய குலதெய்வம் இங்கேதான்  இருக்கிறது என்று தெரிவித்தார்.

மேலும், கடந்த  2014ம் ஆண்டு தேர்தலில் போகாத இடத்திற்குப் போய்விட்டேன் என்றவர்,  போன இடத்தில் நான் எதிர்பார்த்தது எதுவும் நடக்கவில்லை. தமிழ்நாட்டை விட்டுவிட்டு, தாயை விட்டுவிட்டு, ஒரு மாயையை நோக்கி போய்விட்டேன், அதனால்தான் தோல்வி அடைந்தேன் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய பாரிவேந்தர் பிரதமர் மோடியை கடுமையாக குற்றம் சாட்டினார். நமது  சுதந்திரத்தை 2016ம் ஆண்டு  பணமதிப்பிழப்பு  செய்ததன்  மூலம் மோடி பறித்துவிட்டார் என்றவர், ஜிஎஸ்டி மூலம் மக்களின்  வேலைகளையும் பறித்து விட்டார் என்றவர், கஜா புயலுக்காக ஆறுதல் கூட சொல்லாத கட்சியில் இருக்க வேண்டுமா என நினைத்தேன் என்றவர்,  கஜா புயல் பாதிப்பின்போது ஓடோடி வந்து முதலில் உதவியர் ஸ்டாலின்தான் என்றும் கூறினார்.

தற்போது மாநிலத்திலும், மத்தியிலும் ஆட்சியை மாற்ற வேண்டிய நேரம் இது, எனவேதான் நான் திமுக கூட்டணியில் இணைந்துள்ளேன் என்றும் கூறினார்.