சென்னை சாலிகிராமத்திலுள்ள பிரசாத் ஸ்டூடியோவில் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு பகுதியில் இசையமைக்கும் பணியை மேற்கொண்டுவந்துள்ளார் இளையராஜா . அந்த இடத்தை மற்றொரு நபருக்கு ஒப்பந்தத்துக்கு விட்டுள்ளது தற்போதைய பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம்.

இதனிடையே இட உரிமை தொடர்பாக இரு தரப்பிற்கும் இடையேயான வழக்கு ஏற்கனவே 17’வது உதவி சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் போதுமான ஆவணங்கள் தாக்கல் செய்தும் சிட்டி சிவில் நீதிமன்றம் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்றும் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியிருந்தார் இளையராஜா.

இதைத்தொடர்ந்து இளையராஜா தொடர்ந்த வழக்கை சமரச தீர்வு மையத்திற்கு அனுப்பியசென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் அங்கு எடுக்கும் முடிவை தெரிவிக்குமாறு கூறிய நீதிபதி விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தார்.