இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை பாகுபாடு இல்லாமல் அனைவரையும் தாக்குகிறது .

அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், ராஜமெளலி, ஐஸ்வர்யா அர்ஜுன் உள்ளிட்ட பலர் முழுமையாக கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். சிலர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும், அதை வெளியே சொல்லாமலே வீட்டில் தனிமைப்படுத்திக் குணப்படுத்திக் கொண்டுள்ளனர்.

மைல்டு மைல்டு கொரோனா தான் தனக்கு ஏற்பட்டுள்ளதாக கடந்த வாரம் வீடியோ வெளியிட்டு இருந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் தற்போது கொரோனாவின் கோரப் பிடியில் சிக்கி உள்ளார்.

எம்.ஜி.எம் மருத்துவமனையில் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், ஐசியூவில் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இசைஞானி இளையராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ உன்னுடைய நட்பும், என்னுடைய நட்பும் நமது நட்பு எந்த காலத்திலும் பிரிந்தது இல்லை. நாம் சண்டை போட்டாலும் சரி. நம் இருவருக்குள் சண்டை இருந்தாலும் அது நட்பு. சண்டை இல்லாமல் போனாலும் அது நட்பே. அதனை நீயும் நன்றாக அறிவாய். நானும் நன்றாக அறிவேன். அதனால் இறைவனிடம் நன்றாக பிரார்த்திக்கிறேன். நீ நிச்சயமாக திரும்பி வருவாய் என்று… என்னுடைய உள் உணர்வு சொல்லுகிறது. பாலு…. சீக்கிரம் வா…. உனக்காக காத்திருக்கின்றேன்” எனக் கூறியுள்ளார்.