சென்னை:

சென்னையில் நடைபெற உள்ள இளையராஜா இசை நிகழ்ச்சிக்கு தடை இல்லை என்று சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

மேலும், இது தொடர்பான கணக்கு வழக்குகளை மார்ச் 3ந்தேதி  பொதுக்குழுவில் தயாரிப்பாளர் சங்கம் தாக்கல் செய்யவேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக இளையராஜா 75  இசை நிகழ்ச்சி திட்டமிட்டபடி, பிப்ரவரி 2, 3 தேதிகளில் நடைபெறுவது உறுதியாகி உள்ளது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் பிப்ரவரி 2, 3 தேதிகளில் இசை அமைப்பாளர் இளையராஜாவின் பிறந்த நாளையொட்டி அவரை கவுரவப் படுத்தும் விதமாக இசை நிகழ்ச்சி பிப். 2, 3 தேதிகளில் விழா நடைபெற உள்ளது. இந்த விழாவை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைப்பதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க கோரி தயாரிப்பாளர்கள் ஜே.சதீஷ்குமார், ராதாகிருஷ்ணன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த னர். திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் நிதியை தவறாக பயன்படுத்துவதாக குற்றம் சாட்டியிருந்தனர்.

இந்த வழக்கில் ஏற்கனவே  விசாரணையில், இளையராஜா பாராட்டு விழாவை ஏன் ஒத்திவைக்க கூடாது என கேள்வி எழுப்பியதோடு, இளையராஜா நிகழ்ச்சிக்கான செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, இன்று நடைபெற்ற விசாரணையின்போது, தயாரிப்பாளர் சங்கம் சார்பில்,  2016 மற்றும் 2017 செலவுக்கணக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், இநத்   2 நாள் இசை நிகழ்ச்சி மூலம்,  இளையராஜாவுக்கு ரூ.25 லட்சமும், ஒய்.எம்.சி.ஏ மைதானத்திற்கு ரூ.35 லட்சமும் கொடுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது எனவும் தெரிவித்தது.

அதைத்தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத்துக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள்,  2018 வரவு செலவு கணக்கையும் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது உயர்நீதி மன்றம்.

இந்த நிலையில் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பில், உரிய ஆதாரங்களின்றி கடைசி நேரத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.  இதனால் தயாரிப்பாளர்கள் சதீஷ்குமார், ராதாகிருஷ்ணன் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது. மேலும், கணக்கு வழக்குகளை மார்ச் 3 பொதுக்குழுவில் தயாரிப்பாளர் சங்கம் தாக்கல் செய்யவேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.