அகமதாபாத்: குஜராத்தில் காவல் நிலையம் ஒன்றில் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட காவலர்களே, கடந்த 3 ஆண்டுகளாக சட்டவிரோதமாக மது விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.
குஜராத்தின் மெஹ்சானா மாவட்டத்தின் காடி காவல் நிலையத்தின் அருகிலுள்ள சபர்மதி கால்வாயில் கொட்டப்பட்டிருந்த மதுபாட்டில்கள் கண்டறியப்பட்டதையடுத்து இந்த உண்மை வெளியாகியுள்ளது.
காடி காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளர் ஓஎம் தேசாய், இரண்டு காவல் துணை ஆய்வாளர்கள், 4 காவலர்கள்,  குஜராத் ரக்சா தல் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் மற்றும் ஒரு வீட்டுக்காவலர் ஆகியோர் இந்த சட்டவிரோத வணிக நடவடிக்கையில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆனால், இந்த சட்டவிரோத வணிகத்தின் எல்லை மற்றும் இதனால் அதிகம் பலன்பெற்றோர் யார் என்பது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான குழு விசாரணை நடத்தி வருகிறது.
சட்டவிரோத மதுபான பொருட்கள், கடந்த 3 ஆண்டுகளாகவே, பல்வேறு காவல்துறை சோதனைகளின் மூலம் கண்டெடுக்கப்பட்டு வந்துள்ளது மற்றும் அவை காடி காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தன.