தமிழகத்தின் ஆளும் அ.தி.மு.க. அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்திருப்பதா கமல் கூறியதை அடுத்துஅவரை ஆளும்கட்சி பிரமுகர்கள் வரம்பு மீறி பேசி வருகிறார்கள். கைது செய்ய வேண்டும் என்றும் கூறி வருகிறார்கள்.

கமலுக்கு மு.க.ஸ்டாலின், வைகோ, ஓ.பி.எஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் வழக்கம் போல கவிதை போன்று எழுதியுள்ளார்.

அவரது “கவிதை” பெரும்பாலும் புரியாதவகையில் இருக்கும் என்பதால், “விமர்சத்தைபுரியாதோர்க்கு ஆங்கில பத்திரிகைகளில் நாளை வரும் சேதி” என்று புரியும்படி முன்னுரை எழுதி, பிறகு கவிதை எழுதியிருக்கிறார்.

அது..

“இடித்துரைப்போம் யாருமினி மன்னரில்லை

 துடத்தெழுவோம் மனதளவில் உம்போல் யாம்

மன்னரில்லை  

தோற்றிருந்தால் போராளி

முடிவெடுத்தால் யாம் முதல்வர்

அடிபணிவோர் அடிமையரோ?

முடிதுறந்தோர் தோற்றவரோ?

போடா மூடா எனலாம் அது தவறு.

தேடாப் பாதைகள் தென்படா

வாடா தோழா என்னுடன்

மூடமை தவிர்க்க முனைவரே தலைவர்

– அன்புடன்,

நான் “ – இவ்வாறு கமல் எழுதியிருக்கிறார்.

மேலும், “அமையாது அலைபவர்க்கும் அமைந்த என் தோழர்க்கும், விரைவில் ஒரு விளி கேட்கும். கேட்டு அமைதி காப்பீர். உண்மை வெயிலில் காயும் நேற்றைய மழைக்காளான்” என்றும் கமல் குறிப்பிட்டுள்ளார்.

முழு அர்த்தம் விளங்காவிட்டாலும், முதல்வர், தலைவர் என்று அவர் குறிப்பிட்டிருப்பதைப் பார்த்தால் அரசியலில் நேரடியாக ஈடுபட விரும்புகிறாரோ  என்று தோன்றுகிறது.