தமிழகத்தில் அடுத்து வரும் இரு தினங்களுக்கு மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மிதமான முதல் கனமழை வரை பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மழையின் தாக்கம் குறைந்திருக்கிறது. வங்கக் கடலில் நிலவி வந்த தாழ்வு நிலையானது, ஆந்திராவை நோக்கி நகர்ந்துள்ளது. இதன் காரணமாக இன்று மாலை முதல் வட கடலோர மாவட்டங்களில் மிதமான மழை இருக்கும். டெல்டா மாவட்டங்களில் ஓரீரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும். அரபிக் கடலில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அதே இடத்தில் நீடிக்கிறது. இதனால் மேற்கு தொடர்ச்சி மழை பகுதிகளில் மழை பெய்யும்.

சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்” என்று தெரிவித்தார்.