டெல்லி: வரக்கூடிய 5 நாட்களில் தமிழக மலைப்பகுதி மாவட்டங்களில் மிக அதிக கனமழை பெய்யும் என்று அகில இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. அதன் எதிரொலியாக அப்பகுதி மாவட்டங்களின் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந் நிலையில் அகில இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள  அறிவிப்பில்  கூறப்பட்டு உள்ளதாவது:

வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அதே இடத்தில் நீடிக்கிறது. அதன் காரணமாக வரக்கூடிய 5 நாட்களுக்கு தமிழகத்தில் மேற்கு  மலைத்தொடர்ச்சி மாவட்டங்களில் மிக அதிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொங்கன், கோவா, மும்பை, மத்திய மகாராஷ்டிரா மற்றும் மத்தியப்பிரதேசத்திலும் கனமழை பெய்யும் என்று தெரிவித்து உள்ளது. கடந்த 3 நாட்களாக நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 48 மணி நேரத்தில் 60 செ.மீட்டருக்கும் அதிகமான மழை பொழிவு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.