டில்லி:

ழைநீர் சேகரிப்பு திட்டத்தை இயக்கமாக நடைமுறைப்படுத்துங்கள் என்றும், தமிழகத்திற்கு வறட்சி நிவாரண நிதியாக ரூ.1000 கோடி வழங்க வேண்டும் என்றும் தமிழக துணைமுதல்வர் ஓ.பி.எஸ் மத்திய நிதி அமைச்சரிடத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜூலை 5ந்தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், மத்திய நிதி அமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிர்மலா சீத்தாராமன், பட்ஜெட் தொடர்பான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். பட்ஜெட் தொடர்பாக மாநில நிதிஅமைச்சர்கள் கூட்டத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூட்டியுள்ளார். இதில் கலந்துகொள்ள நேற்று மாலை டில்லி சென்ற ஓபிஎஸ் இன்று நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய ஓபிஎஸ்,  “ஸ்வச் பாரத் திட்டத்தை போல மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை ஒரு இயக்கமாக நடைமுறைப்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும்.

தமிழகத்தின் தண்ணீர் பிரச்சினையை போக்க கிருஷ்ணா-கோதாவரி காவிரி இணைப்பு திட்டத்தை முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்த மத்திய அரசு முன் வர வேண்டும்., அதற்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும்  என்றும் கோரிக்கை விடுத்தார்.

மேலும்  தமிழகத்தில் வறட்சியை சமாளிக்க மத்திய அரசு சிறப்பு திட்டத்தின் கீழ் ரூ.1000 கோடி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.