முகிலன் காணாமல் போனதாக தொடரப்பட்ட வழக்கில், துப்பு கிடைத்துள்ளதாக உயர்நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்த முகிலன், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக உள்ளார். கடந்த பிப்ரவரி 15ம் தேதி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நிருபர்களை சந்தித்து, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற வன்முறையில் பொதுமக்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்றும், போலீஸ் உயர் அதிகாரிகள் தான் வன்முறைக்கு காரணம் என்றும் கூறி, சில ஆதாரங்களை பத்திரிகையாளர்கள் முன்னிலையில் முகிலன் வெளியிட்டார். இந்த ஆதாரங்களை வெளியிடுவதால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் கூறிய முகிலன், அன்றிரவு மதுரை செல்வதற்காக எழும்பூர் ரயில் நிலையம் சென்றார். இரவு 10.30 மணிக்கு நண்பர்களுடன் தொலைபேசியில் பேசியுள்ள முகிலன், அதன் பிறகு காணாமல் போயுள்ளார். காவல்துறை இது தொடர்பான புகாரை விசாரித்து வந்த நிலையில், அந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி வசம் ஒப்படைக்கப்பட்டது. முகிலன் காணாமல் போனது குறித்து சி.பி.சி.ஐ.டி போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் மாயமான முகிலனை கண்டுபிடித்து தரக்கோரி ஹென்றி திபேன் என்பவர் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.சி.ஐ.டி தரப்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், ”சமூக ஆர்வலர் முகிலன் மாயமான வழக்கில் துப்பு கிடைத்துள்ளது. முகிலன் குறித்த தகவலை வெளியே தெரிவித்தால் விசாரணை பாதிக்கப்படும். சில உண்மைகளால் அவரது உயிருக்கு கூட ஆபத்துக்கள் ஏற்படலாம். அதனால் அவற்றை தெரிவிக்க விரும்பவில்லை” என்று கூறப்பட்டுள்ளது.

சி.பி.சி.ஐ.டி தரப்பிலான அறிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், வழக்கின் அடுத்த விசாரணையை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.