திருநீறு பூசும்போது முக்கியமாக கடைப்பிடிக்க வேண்டிய சில விஷயங்கள்


முகத்தை அண்ணாந்து வைத்து நிலத்தில் சிந்தாமல் நடு மூன்று விரல்களினால் நெற்றி நிறையப் பூசவேண்டும்.
உள்ளங்கையானது பிரம்மா மற்றும் விஷ்ணு பாகமாகக் கருதப்படுவதால், திருநீற்றை உள்ளங்கையில்தான் பெறவேண்டும். ஆண்கள் ‘திரிபுண்டரம்’ எனப்படும் நீரால் கலக்கி மூன்று கிடைக்கோடுகளாகவும், ‘உத்தூளனம்’ எனப்படும் வெறும் விபூதியாகவும் அணிய வேண்டும் என்பதும், பெண்கள் தண்ணீர் விடாமல் அணியவேண்டும் என்பதும் சாஸ்திரம்.

மூன்று விரல்களும் ஓம் எனும் பிரணவ மந்த்ரத்தின் வடிவமாகும். இதில் ஆள்காட்டி விரலால் இடப்படும் கோடு ரிக் வேதம், நடுவிரல் யஜூர் வேதம், மோதிரவிரல் சாம வேதம் ஆகிய மூன்று வேதங்களையும் குறிக்கிறது.
திருநீறு அணியும் ஆண்கள் தண்ணீரில் அதைக் குழைத்து, ஆள்காட்டி விரல், நடுவிரல் மற்றும் மோதிர விரல் ஆகியவற்றால் எடுத்து, மூன்று கோடுகளாக நெற்றி, கழுத்து, மார்பு, தோள்கள், தொப்புளுக்கு மேற்புறம், முழங்கைகள், மணிக்கட்டுகள், விலா, முழங்கால்கள் ஆகிய பகுதிகளில் அணிய வேண்டும். காலை, மதியம், மாலை மூன்று நேரங்களிலும், பூஜை காலங்களிலும் விபூதி பூசுவது அவசியம்.
நடந்து கொண்டோ படுத்துக்கொண்டோ பூசக்கூடாது. ஆச்சாரியார், சிவனடியார் இவர்களிடம் விபூதி பெறும்போது அவர்களை வணங்கிப் பெறுதல் வேண்டும்.
வடக்கு கிழக்குமுகமாக நின்று தான் திருநீறு பூசவேண்டும். தலையைக் கவிழ்த்தும் நடுங்கிக்கொண்டும் வாயைத் திறந்து கொண்டும் பேசிக்கொண்டும் திருநீறு பூசக்கூடாது.
விபூதி வைத்திருக்கும் கலயத்தைக் கவிழ்த்து வைக்கக்கூடாது. கோயிலில் விபூதி பிரசாதம் வாங்கும்போது இடது கையை கீழே வைத்து வலது கையை மேலே வைத்து வாங்க வேண்டும்.
வாங்கிய விபூதியை ஒரு தாளில் இட்டு நெற்றியில் இட்டுக் கொள்ள வேண்டும். இடது கை விரலால் நெற்றியில் விபூதி இடக்கூடாது. ஒருவர் திருநீறு தருகிறார் என்றால் வாங்க மறுக்கக் கூடாது.
கோவிலில் இறைவனை தரிசித்த பிறகு பிரசாதமாக விபூதி வழங்கி, ஆசிர்வதிப்பது காலம் காலமாய் நடைமுறையில் இருக்கும் ஒரு வழக்கம். கோவிலில் இந்த மரபு இன்றும் வழக்கில் இருக்கிறது.
விபூதியானது அதனை அணிந்து கொள்கிறவர்களைத் தீவினைகளில் இருந்து காப்பாற்றும் கவசமாய் இருப்பதுடன், வற்றாத செல்வத்தையும் தருகிறது.