டாவோஸ்: சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலகப் பொருளாதார அமைப்பின் மாநாட்டில், தான் பங்கேற்கும் செலவை இரண்டு பாகிஸ்தான் தொழிலதிபர்கள் ஏற்றுக்கொண்டதாக கூறியுள்ளார் அந்நாட்டின் பிரதமர் இம்ரான்கான்.

பாகிஸ்தான் சமீப ஆண்டுகளில் மோசமான நிதி நெருக்கடியில் தள்ளாடி வருகிறது என்பது அறிந்ததே. எங்கெல்லாம் கடன் வாங்க முடியுமோ, அங்கெல்லாம் கைநீட்டி வருகிறது பாகிஸ்தான்.

இந்நிலையில், தனது பயணம் குறித்து இம்ரான்கான் கூறியதாவது; எனது டாவோஸ் பயணச் செலவு மிகவும் குறைவானதாகும். இந்த செலவை எனது நண்பர்களும் தொழிலதிபர்களுமாகிய இக்ரம் செஹல் மற்றும் இம்ரான் சவுத்ரி ஆகியோர் ஏற்றனர்.

இல்லையெனில், நான் மாநாட்டிற்கே சென்றிருக்க மாட்டேன். அரசுக்கு கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்த நான் விரும்பவில்லை. எனது அமைச்சர்கள் வெளிநாடு பயணம் என்ற பேச்சு வந்தாலே, மிகுந்த எச்சரிக்கையுடன் ஆராய்கிறேன்.

பெரும்பாலான பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் வாழும் 90 லட்சம் பாகிஸ்தானியர்கள் நாட்டிற்கு, இந்த இக்கட்டான சூழலில் உதவிட வேண்டும். இதன்மூலமே, நாட்டின் ஜிடிபி மேம்படும்” என்றார் இம்ரான்கான்.