டில்லி
கடந்த 2 வருடங்களில் பாரத ஸ்டேட் வங்கி ரூ.1 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளது.
தற்போது வங்கிகளில் வாராக்கடன்கள் அதிகரித்து வருகின்றன. இந்த வாராக்கடன்கள் என்பது செயல்படாத முதலீடுகளாக உள்ளன. அதாவது இவை எந்த ஒரு கணக்கிலும் வராது. அதே நேரத்தில் வங்கிகளிடம் இதற்கு ஈடான சொத்துக்கள் இருக்கும். அவைகளை வங்கி பயன்படுத்த முடியாததால் இருந்தும் இல்லாத நிலை ஏற்படுகிறது. அத்துடன் கடன் வாங்கும் போது அளிக்கும் சொத்துக்களின் மதிப்பு பிறகு குறையவும் வாய்ப்புண்டு
வங்கிகள் தங்களிடம் ஈடாக உள்ள சொத்துக்களை பறிமுதல் செய்து கடன்களை தள்ளுபடி செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இவ்வாறு தள்ளுபடி செய்யும் கடன்களுக்கு மொத்தம் வர வேண்டிய தொகைக்கு ஈடான சொத்துக்கள் வங்கிகளிடம் பெரும்பாலான சமயங்களில் இருப்பதில்லை என்பதே உண்மையாகும்.
நாட்டின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி தள்ளுபடி செய்த கடன் விவரங்கள் வெளியாகி உள்ளன. இதில் இந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த கணக்கு வருடத்தில் ரூ. 40,809 கோடி வாராக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டுக்கான தள்ளுபடி இலக்கு ரூ. 1.02 லட்சம் கோடியாக நிர்ணயம் செய்யஒப்பட்டிருந்தது.
இதற்கு முந்தைய கணக்கு ஆண்டில் ரூ.57,646 கோடி வாராக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. அதைத் தவிர நடப்பாண்டிலும் கடன் தள்ளுபடி நடவடிக்கை மேற்கொள்ளபட்டு வருகிறது. இது வரை வங்கியின் வங்கியின் செயல்படா சொத்துக்களின் கணக்கு 23% அதாவது ரூ.1.76 லட்சம் கோடி குறைந்துள்ளது.