டில்லி

சுங்கச்சாவடிகளின் வருட வருமானம் இன்னும் 5 வருடங்களில் ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு உயரும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் கட்டணம் செலுத்தக் காத்திருப்பதால் கால தாமதம் உண்டாகிறது.  அதைப் போக்க மத்திய அரசின் நெடுஞ்சாலைத்துறை ஃபாஸ்டாக் என்னும் அட்டை மூலம் கட்டணம் செலுத்தும் முறையை டிசம்பர் மாதம் முதல் அமல்படுத்த உள்ளது.   இதற்கான தொழில்நுட்பப் பணிகள் நடந்து வருகின்றன.   இது குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி உள்ளார்.

நிதின் கட்கரி, “தேசியநெடுஞ்சாலைத் துறையின் கீழ் 1.4 கிமீ தூரம் உள்ள நெடுஞ்சாலைகள் உள்ளன.  இவற்றில் ஃபாஸ்டாக் அட்டை முறைக்கான தொழில்நுட்பம் 24,996 கிமீ தூரமுள்ள சாலைகளில் அமைக்கப்பட்டுள்ளன.  அது இந்த வருட இறுதிக்குள் 27000 கிமீ தூரத்தை எடி விடும். எனவே அதன் பிறகு அதாவது டிசம்பர் 1 ஆம் தேதி முதல் சுங்கச் சாவடிக் கட்டணம் ஃபாஸ்டாக் அட்டைகள் மூலம் மட்டுமே செலுத்த முடியும்.

தற்போது நெடுஞ்சாலைச் சுங்கச்சாவடிகள் மூலம் வருடத்துக்கு ரூ.30000 கோடி வருமானம் கிடைத்து வருகிறது.  மேலும்  பல சாலைகளை அரசு அமைத்து வருகிறது.   இதனால் இன்னும் ஐந்து ஆண்டுகளில் இந்த வருமானம் ரூ.1 லட்சம் கோடியை எட்டி விடும். அவ்வாறு வருமானம் வரும்போது நாம் வங்கிகளில் இருந்து அதிகம் கடன் பெற முடியும்.  அந்தப் பணத்தின் மூலம் பல திட்டங்களை இயற்ற முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.