டில்லி:

ஒவ்வொரு மாநிலத்திலும், இரண்டு மாவட்டங்களில் உள்ள நீதிமன்ற அறைகளில், சிசிடி கேமரா எனப்படும் கண்காணிப்பு கேமரா வைக்க உச்ச நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. அதேநேரம் அந்த கேமராக்கள் ஆடியோ பதிவு இல்லாதவையாக இருக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளது.

நீதிமன்றத்தின் அன்றாட நிகழ்வுகளை, வீடியோ, ஆடியோ பதிவு செய்ய வேண்டும் என கடந்த 2013ம் ஆண்டு முதல் மத்திய அரசு கூறி வந்தது.  இதுதொடர்பாக மத்திய சட்ட அமைச்சகம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பல கடிதங்கள் மூலம் வலியுறுத்தியது.

இந்த சூழ்நிலையில் , ஆதர்ஷ் கே கோயல், உதய் யு லலித் ஆகியோர் அடங்கிய உச்சநீதி மன்ற அமர்வு, நாடு முழுவதும் உள்ள 24 நீதிமன்றங்களுக்கு ஓர் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதில் ஒவ்வொரு மாநிலத்திலும் குறைந்தது இரண்டு மாவட்டங்களில் உள்ள மாவட்ட நீதிமன்றம் மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில், ஆடியோ பதிவு வசதி இல்லாத கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்  என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மூன்று மாதங்களுக்குள் இந்த நடைமுறையை மேற்கொள்ள வேண்டும் என்றும் அமர்வு வலியுறுத்தியுள்ளது.