லக்னோ,

உத்திரப்பிரதேசத்தில் இறந்தவர்கள் பெயரிலும், சினிமா நட்சத்திரங்கள் பெயரிலும் போலி ரேஷன் கார்டுகள் தயாரித்து பலகோடி ரூபாய் சம்பாதித்த நபரை கையும் களவுமாக பிடித்தனர். தொகுதி எம் எல் ஏவின் ஆதரவில் இந்தமுறைகேட்டை  அவர்  தொடர்ந்து நடத்திவந்துள்ளார்.

பதம்சிங் என்பவர் ஆக்ரா மாவட்டத்தில் நிபோரா என்ற கிராமத்தில் ரேசன் கடை வைத்துள்ளார். இவர் மீது கடந்த இரண்டு வருடங்களாக கிராமத்திலிருப்பவர்களுக்கு உணவுப்பொருள்களை வழங்காமல் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாரிடம் புகார்கள் அளிக்கப்பட்டு வந்தன.  ஆனால்  அவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில் கடந்த 24 ம் தேதி சமூகசேவகர் ஒருவரது உதவியுடன் போலீசார் திடீர் என்று இவரது கடைக்குள் புகுந்து ஆய்வுநடத்தினர். அப்போது, அங்கு 3500க்கும் அதிகமான போலி ரேசன்கார்டுகள் இருப்பதை கண்டுபிடித்தனர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சமூகசேவகர் பகவான்  என்பவர்,  பதம் சிங் அரிசி சர்க்கரை பருப்பு உள்ளிட்ட ரேசன் பொருள்களை

கடந்த இரண்டாண்டுகளாக யாருக்கும் விற்றதில்லை. ஆனால் போலியான கார்டுகளை தயாரித்து காய், கனிகளின் பெயரிலும்  நடிகர், நடிகைகளின் பெயரிலும், சினிமா படங்களிலும் பெயர்களிலும், பாடல் வரிகளில் இருக்கும் வார்த்தைகளைகூட ரேசன்கார்டில் பயன்படுத்தியிருப்பதாக  ஆச்சரியம் தெரிவித்தார்.

பதுக்கிவைத்து அதிகவிலைக்கு விற்பதுதான் பதம்சிங்கின் நோக்கம். இதை பலமுறை கண்டித்தும் அவர் திருந்தவில்லை. இன்று அவர் ரேசன் பொருள்களை மூன்று ட்ரக்குகளில் ஏற்றி கடத்த தயார் நிலையில் இருந்தார். அப்போது போலீசார் அவரை கைது செய்ததாக தெரிவித்தார்.   ஊழல் முறைகேடு காரணமாக 2014 ம் ஆண்டு இவரது உரிமம் ரத்தானது என்றும் ஆனால் தொகுதி எம் எல் ஏவின் சிபாரிசில் அவரது உரிமத்தை புதிப்பித்துவிட்டதாக அவர் தெரிவித்தார்.