வாஷிங்டன்:

அமெரிக்காவின் நியூஜெர்சி நகர் நெவார்க் விமானநிலையத்தில் யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தில் சில தினங்களுக்கு முன்பு ட்ராய் பட்டூன் என்ற 25 வயது வாலிபர் ஏறியுள்ளார். விமானத்தின் உள்ளே சென்ற பின்னர் இது தான் செல்ல வேண்டிய விமானம் இல்லை என்று நினைத்து இறக்கி விடும்படியும் சிப்பந்திகளிடம் தெரிவித்தார்.

ஆனால் சிப்பந்திகள் அமைதியாக இருக்கும்படி கூறியுள்ளனர். இதனால் ஆவேசம் அடைந்த அந்த வாலிபர் அவசர கால ஜன்னலை திறந்து கொண்டு விமானத்தின் இறக்கை மீது குதித்தார். இதனால் அவருக்கு காயம் ஏற்பட்டு அலறி துடித்தார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த விமானநிலைய ஊழியர்கள் அவரை மீட்டனர். இதனால் விமானம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

இதையடுத்து அந்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். சரியான விமானத்தில் தான் அவர் ஏறியிருப்பது விசாரணையில் தெரியவந்தது. எனினும் அவர் ஏன் அப்படி நடந்துகொண்டார்? என்பது குறித்து தொடர் விசாரணை நடந்து வருகிறது.