ஜபார்பாத்,

குஜராத்தில் பிரசவத்துக்காக ஆம்புலன்சில் அழைத்து செல்லப்பட்ட பெண்,  நடுக்காட்டில்,  சிங்கங்கள் வழி மறித்ததால், ஆம்புலன்சிலேயே குழந்தை பெற்றார்.

இந்த பரபரப்பான, பதற்றமான பிரசவம் குஜராத்தில் உள்ள கிர் பாரஸ்ட் ஏரியாவில் நடைபெற்றுள்ளது.

குஜராத்தில்  பிரசவ வலி காரணமாக மங்குபென் மக்வானா என்ற 32 வயது பெண்  ஆம்புலன்சு மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.  ஆம்புலன்சு நள்ளிரவு, அமரெலி மாவட்டத்தில் உள்ள  கிர் பாரஸ்ட் வழியாக சென்றுகொண்டிருந்தபோது  சிங்கக்கூட்டம் ஒன்று வழி மறித்து.

இதன் காரணமாக ஆம்புலன்சு மேற்கொண்டு செல்ல முடியாத நிலை நீடித்தது. 20 நிமிடங்களுக்கு மேலாக ஆம்புலன்சு நகர முடியாத நிலையில்,  ஆம்புலன்சில் இருந்த பெண்ணுக்கு மீண்டும் பிரசவ வலிஏற்பட்டது. அதையடுத்து  அழகான குழந்தையை ஆம்புலன்சு ஊழியர்களின் உதவி யுடன் பெற்றெடுத்தார்.

மருத்துவர்கள் போனில் சொன்ன ஆலோசனைகளை  கேட்டு மக்வானாவுக்கு பிரசவம் பார்த்ததாக ஆம்புலன்சு ஊழியர்கள் கூறினர்.

கடந்த வியாழக்கிழமை  நள்ளிரவு சுமார் 2.30 மணி அளவில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.  அதைத்தொடர்ந்து மக்வானா பிறந்த குழந்தையுடன் அருகிலுள்ள ஜபார்பாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து ஆம்புலன்சு டிரைவர் ஜாதவ் கூறும்போது, 3 ஆண் சிங்கங்களுடன் 12 சிங்கங்கள் சேர்ந்த கூட்டம் ரோட்டை மறிந்து நின்றதால், தொடர்ந்து ஆம்புலசை இயக்க முடியவில்லை.

இதற்கிடையில் மக்வானாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், உடனடியாக மருத்துவரிடம் போனில் தொடர்பு கொண்டு, அவரது ஆலோசனை பெற்று பிரசவம் பார்க்கப்பட்டது என்று கூறினார்.

மேலும் வாகனத்தில் விளக்கு தொடர்ந்து எரிந்துகொண்டிருந்ததால், 20 நிமிடங்களுக்கு பிறகே  சிங்கங்கள்  ‘மெதுவாக நகர்ந்து வழி கொடுத்ததாகவும் அதைத்தொடர்ந்தே ஆம்புலன்சு மெவாக இயக்கப்பட்டது என்று கூறினார்.

மேலும் ஆம்புலன்சில் சிங்கக்கூட்டங்களின் நடுவே குழந்தை பெற்ற  மக்வானா பிறந்த குழந்தையுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், தற்போது தாயும், சேயும் நலமாக இருப்பதாக கூறினார்.