பெங்களூரு

ந்திராவின் வழியில் கர்நாடக முதல்வர் தனது சுதந்திர தின உரையில் கர்நாடக மக்களுக்கே அதிக அளவில் வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக பதவி ஏற்ற உடன் கடந்த ஜூலை மாதம் அனைத்து தனியார் நிறுவனம் மற்றும் தொழிற்சாலைகளில் ஆந்திர மாநிலத்தவருக்கு 75% வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என அறிவித்தார். அந்த நிறுவனம் அல்லது தொழிற்சாலைகள் அரசின் நிதி உதவி பெற்றிருந்தாலும் இல்லை என்றாலும் இந்த உத்தரவு செல்லும் எனவும் அவர் தெரிவித்தார். இந்த சட்டம் ஆந்திர சட்டப்பேரவையிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

நேற்று கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் உள்ள ஃபீல்ட் மார்ஷல் மானேக்‌ஷா மைதானத்தில் முதல்வர் எடியூரப்பா தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அப்போது கர்நாடகா ரிசர்வ் காவல்துறை, தேசிய மாணவர் படை, பாரத ஸ்கவுட் உள்ளிட்டோர் அளித்த மரியாதையை ஏற்றுக் கொண்டார். அதன் பிறகு அவர் மக்களிடையே உரை ஆற்றினார்.

அவர் தனது உரையில், “கர்நாடகாவில் உள்ள வேலைவாய்ப்புக்களில் பெரும் பங்கு மாநிலத்தில் வசிக்கும் கன்னட மொழியினருக்கு அளிக்கப்படும் என்பதே நமது முக்கிய நோக்கமாகும். கர்நாடக மக்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் இந்த அறிவிப்பை அளிக்கிறேன். நாம் கன்னட மக்களின் சுயமரியாதையை மதித்து அவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பதில் எவ்வித சமரசமும் செய்துக்கொள்ள கூடாது. அதே நேரத்தில் ஒருமைப்பாட்டை மதிக்கும் வையில் கர்நாடக மாநிலத்துக்கு வேலை தேடி வ்ருக்கு சமமான வாய்ப்புக்கள் அளிக்கவும் தயாராக உள்ளோம்.”