மும்பை:

போலி ஜாதி சான்றிதழ் கொடுத்து அரசு பணியில் சேர்ந்த 11,700 ஊழியர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. போலி சான்றிதழ் மூலம் பல்கலைக்கழகம், அரசு பணிகளில் சேர்ந்தவர்களின் பட்டங்களை பறிக்கவும், பணி நீக்கம் செய்யவும் 2017ம் ஆண்டு ஜூலை மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

மஹாராஷ்டிரா அரசு மேற்கொண்ட ஆய்வில் 11,700 ஊழியர்கள் போலி பழங்குடியின ஜாதி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் பல ஆண்டுகளாக பணியாற்றி வருவதால் அவர்களை பணி நீக்கம் செய்வதில் அரசு முடிவு எடுக்க முடியாமல் தவித்து வருகிறது. இதில் சிலர் எழுத்தர்களாக பணியில் சேர்ந்து படிப்படியாக பதவி உயர்வு பெற்று துணை செயலாளராகவும் உள்ளனர்.

இது குறித்து அட்டார்னி ஜெனரல், நீதித்துறை ஆலோசனைகளை அரசு கோரியுள்ளது. இது தொடர்பாக தலைமைச் செயலாளர் தலைமையில் கடந்த 20ம் தேதி ஆலோசனை கூட்டமும் நடந்துள்ளது. உ ச்சநீதிமன்ற உத்தரவை பின்பற்றுவதை தவிர வேறு வழி இல்லை என்று கருத்து எழுந்துள்ளதால் 11,700 ஊழியர்களுக்கும் சிக்கல் ஏற்பட்டுளளது.