பீத், மகாராஷ்டிரா.

காராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பீத் மாவட்டத்தில் பாதிக்கும் மேற்பட்ட பெண்களுக்கு கர்ப்பப்பை அகற்றப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பீத் மாவட்டம் மிகவும் வறட்சியான மாவட்டம் ஆகும். இந்த பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்த பலரும் கரும்பு வெட்டும் தொழிலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு கரும்பு வெட்டும் பருவத்தில் மட்டுமே வேலை வாய்ப்பு கிடைக்கிறது. அதனால் ஒரு குடும்பத்தில் உள்ள கணவன் மனைவி ஆகிய இரு பாலரும் ஒப்பந்தம் செய்யப்பட்டு அடுத்த மாவட்டங்களுக்கு அழைத்துச் சென்று இந்த பணிக்கு பயன்படுத்த படுகின்றனர்.

இவ்வாறு அழைத்துச் செல்லப்படும் பெண்கள் மாத விடாய் நேரத்தில் பணி புரிய முடியாத நிலை ஏற்படுகிறது. இதை ஒப்பந்த தாரர்கள் விரும்புவதில்லை. அது மட்டுமின்றி மகளிரின் ஊதியம் இதனால் குறைவதை அந்த பெண்களின் குடும்பத்தினர் குறிப்பாக அவர்களது கணவர் ஒப்புக் கொள்வதில்லை. இதற்கு முக்கிய காரணம் வறுமை ஆகும்.

இது குறித்து பண்டு உகாலே என்னும் நபர், “நாள் ஒன்றுக்கு நானும் எனது மனைவி சத்யபாமாவும் பொதுவாக 3-5 டன் கரும்பு வெட்டுவோம். எங்களுக்கு ஒரு டன் கரும்புக்கு ரூ.250 வெட்டுக் கூலி அளிக்கின்றனர். இந்த 4-5 மாத வேலையில் நாங்கள் ஈட்டும் ஊதியம் வருடம் முழுவதும் வைத்துக்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம். அதனால் எங்களுக்கு ஒரு நாள் கூட வேலை இல்லாமல் இருக்க முடியாது.

அதனால் எங்கள் ஊர் பெண்கள் இரண்டு அல்லது மூன்று குழந்தை பிறந்ததும் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்கு பதில் கர்ப்பப்பை அகற்றும் அறுவை சிகிச்சையை செய்துக் கொள்கின்றனர். குடும்பக் கட்டுப்பாடு அறுவை மூலம் குழந்தைகள் பிறப்பதை நிறுத்த முடியும். ஆனால் கர்ப்பப்பை அகற்றும் அறுவை சிகிசை மூலம் மாதவிடாய் வருவதை நிறுத்த முடியும்” என தெரிவித்துள்ளார்.

இது குறித்து மந்தா உகாலே என்னும் பெண், “எங்கள் கிராமத்தில் கர்ப்பப்பை உள்ள பெண்களை காண்பது மிகவும் அரிது. இது போல கர்ப்பப்பை எடுப்பது எங்கள் பகுதியில் சகஜமான ஒன்றாகும். முக்கியமாக கர்ப்பப்பை எடுக்காத பெண்களை ஒப்பந்ததாரர் வேலைக்கு சேர்ப்பது கிடையாது. ஆகவே வேலை வேண்டும் என்றால் கர்ப்பப் பை அகற்றுவது அவசியமாகிறது.” என தெரிவித்துள்ளார்.