திருவனந்தபுரம்: கேரளாவில் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கான மெய் நிகர் வகுப்புகளை தொடங்கி இருக்கின்றன.

கேரளாவில் தான் நாட்டிலேயே முதல் கொரோனா நோயாளி கண்டறியப்பட்டார். அதன் பிறகு தொற்று அதிகரிக்க, அரசின் தீவிர முயற்சியில் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஆனாலும் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றுகள் மெல்ல, மெல்ல அதிகரித்து வருகிறது.

இந் நிலையில் கேரளாவில் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கான மெய் நிகர் வகுப்புகளை தொடங்கி உள்ளன. சினேகா என்ற மாணவி இந்த ஆண்டு 10 ஆம் வகுப்பில் நுழைந்தார். ஒவ்வொரு ஆண்டும், ஜூன் 1 ஆம் தேதி, இரண்டு மாத விடுமுறைக்குப் பிறகு அவர் பள்ளிக்குச் செல்வார்.

இருப்பினும், இந்த முறை, கொரோனா காரணமாக அவரது பள்ளி திறக்கும் தேதி மாற்றப்பட்டுள்ளது. அவர் திங்கட்கிழமை யூடியூப்பில் தனது ஆசிரியர்களின் சொற்பொழிவுகளைக் கேட்டார்.

அதாவது, எல்.கே.ஜி முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு சோதனை மெய்நிகர் வகுப்புகளை கேரளா தொடங்கி உள்ளது. மாணவர்கள் யூடியூபில் அல்லது அரசாங்கத்தால் நடத்தப்படும் கல்வி சேனல் வழியாக  மெய்நிகர் வகுப்புகளில் கலந்து கொள்ளலாம்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 43 முதல் 45 லட்சம் வரை உள்ள மாணவர்களுக்காக இது நடத்தப்படுகிறது. வார நாட்களில் காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

மெய்நிகர் வகுப்புகளுக்கான திட்டத்திற்கு பர்ஸ்ட் பெல் என்று பெயரிடப்பட்டுள்ளது. இணைய அணுகல் இல்லாதவர்களுக்கு லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரில் கிட் விக்டர்ஸ் சேனல் மூலம் ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றன.

இந்த வசதிகள் கேபிள் நெட்வொர்க்குகளில் இலவசமாக கிடைக்கின்றன. இணையம் வழியாக டிடிஎச் மூலம் ஆலப்புழாவில் ஒரு பஞ்சாயத்தில் 70 மாணவர்கள் பஞ்சாயத்து வாங்கிய ஆண்ட்ராய்டு தொலைபேசிகளில் வகுப்புகளைப் பார்த்தனர்.

இது குறித்து திருவனந்தபுரத்தில் உள்ள பட்டோமில் உள்ள பெண்கள் மாதிரி அரசு மேல்நிலைப் பள்ளியின் மாணவி சினேகா கூறி இருப்பதாவது: வகுப்புகள் நன்றாக இருந்தன. மலையாளம், ஆங்கிலம் மற்றும் கணிதம் ஆகிய 3 பாடங்களில் இன்று வகுப்புகள் இருந்தன.

ஆசிரியர்கள் அடிப்படை அறிமுகம் செய்து கொண்டனர். விரிவான வகுப்புகள் நாளை முதல் தொடங்கும். அவர்கள் எங்களுக்கு வீட்டுப்பாடங்களையும் கொடுத்திருக்கிறார்கள் என்றார். ஒவ்வொரு ஆண்டும், ஜூன் 1ம் தேதி எனது நண்பர்களுடன் மீண்டும் ஒன்றிணையும் நாள்.

ஆசிரியர்கள், நண்பர்கள் மற்றும் பள்ளியில் உள்ள அனைவரையும் நான் இப்போது பார்க்க முடியாமல் உள்ளேன். வகுப்பறையில் இருக்கும் மகிழ்ச்சியை ஆன்லைன் கற்றல் ஒருபோதும் கொடுக்க முடியாது. ஆனால் நாங்கள் விரைவில் பள்ளிக்குச் செல்ல முடியும் என்று நான் நம்புகிறேன் என்று கூறினார்.

எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி மாணவர்களுக்கான வகுப்புகள் அரை மணி நேரம், கீழ் மற்றும் மேல்நிலை வகுப்புகளுக்கு ஒரு மணிநேரம், உயர்நிலைப் பள்ளிக்கு ஒன்றரை மணி நேரம் மற்றும் பிளஸ் டூ மாணவர்களுக்கு இரண்டு மணிநேரம் வகுப்புகள் இருக்கும். இணையம் அல்லது தொலைக்காட்சி வசதி இல்லாத மாணவர்களுக்கு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

ஆனால் வயநாட்டில் உள்ள பழங்குடி மாணவர்களில் 40 சதவீதம் பேர் தொலைக்காட்சிகள் மற்றும் இணைய வசதி இல்லாததால் வகுப்புகளைத் தவறவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, மெய்நிகர் வகுப்புகளில் கலந்து கொள்ளாத மாணவர்களின் விவரங்களை சேகரிக்கப்படும். அங்கன்வாடிகள் மற்றும் பள்ளிகளில் மாநில குடும்பஸ்ரீ மிஷனின் ஒத்துழைப்புடன் அவர்களுக்கு வசதிகள் வழங்கப்படும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது.

கணக்கெடுப்பின்படி, மாநிலத்தில் 2.6 லட்சம் மாணவர்களுக்கு ஆன்லைன் கற்றலுக்கான வசதிகள் இல்லை. ஸ்மார்ட்போன்கள் இல்லாத அல்லது இணைய வசதி  இல்லாத மாணவர்கள் வகுப்புகளில் கலந்து கொள்ள முடியவில்லை என்று கேரள காங்கிரஸ் கமிட்டி தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் கூறினார்.

முதல் வாரம் ஒரு சோதனைக் காலம். தேவையான திருத்தங்களைச் செய்வதற்கும், வகுப்புகளைத் தவறவிட்ட மாணவர்களுக்கு அந்த வசதிகளை ஏற்படுத்தி தருவதற்கும்  அரசாங்கம் அனைத்து தரப்பினரிடமிருந்தும் கருத்து கேட்கும் என்று கல்வி அமைச்சர் சி.கே.ரவீந்திரநாத் கூறினார்.