வேலூர்: மறைந்த நகைச்சுவை நடிகரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான நடிகர் விவேக் நினைவாக வேலூர் பாலாறு படுகையில் 500 மரங்கள் நடப்பபட்டுள்ளது. இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

நகைக்சுவை நடிகரும் சமூக ஆர்வலரும், மறைந்தஅப்துல் கலாமின்  ஆலோசனை வேதவாக்காக கொண்டு தமிழகம் முழுவதும் மரக்கன்றுகளை நட்டு வந்தவர் நடிகர் விவேக். மரக்கன்றுகளை கல்லூரிகள் தோறும் சென்று, மாணாக்கர்களிடையே விழிப்புணர்வை உருவாக்கி வந்தார். மேலும் மூடப்பழக்க வழங்களுக்கு எதிராக நடிப்பின் மூலம் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். திரை உலகைத் தாண்டி பொது வாழ்க்கையிலும் அவர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.  இவர் மாரடைப்பு காரணமாக நேற்று அதிகாலை மரணமடைந்தார்.

அவரது கனவை நனவாக்கும் வகையில் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த உள்ளி கிராமத்தில் பாலாற்று படுகையில் 500 மரக்கன்றுகள் நடப்பட்டன.

உள்ளி கிராமத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த் என்பவர்ல,  தமிழக அரசின் உதவியுடன் ஏற்கனவே ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறார்.  அவர் நேற்று விவேக்கின் மறைவையடுத்து கூடுதலாக 500 மரக்கன்றுகள் நடும் பணியை அவர் தொடங்கினார். அவருக்கு உதவியாக உள்ளி ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தின்கீழ் பணிபுரியும் தொழிலாளர்கள் மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஒரு ஆண்டுக்கு அவர்கள் மரக்கன்றுகள் பராமரிக்கும் தொழிலில் ஈடுபடுத்தப்படுவர் என ஊராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நடிகர் விவேக் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வேலூரை சேர்ந்த சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் வீடு வீடாக சென்று 100 மரக்கன்றுகளை வழங்கி அசத்தினார்.