ஜெயலலிதா என்று ஒரு பெண் இல்லாத நிலையில், முதன்முதலாக நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும் அதிமுக   தேர்தலை எதிர்கொள்ளவும், எதிர்க்கட்சிகளின் தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கவும் முடியாமல்  தடுமாறி வருகிறது….

அதிமுக தொண்டர்களும், தேர்தல் பணியில் சுறுசுறுப்பு காட்டாமல் சோர்வடைந்து உள்ளனர். அவர்களை ஊக்குவிக்கவோ.. உற்சாகப்படுத்தவோ திறமையான தலைவர்கள் கட்சியில் இல்லை என்பது ஊர்ஜிதமாகி உள்ளது.

தற்போதைய ஈபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் தங்களது பதவியை காப்பாற்றி  கொள்ள மட்டும்தான் முயற்சிக்கிறார்களே ஒழிய கட்சியை வலுப்படுத்தவோ, வெற்றிக்கனியை பறிக்கவோ முயற்சிகள் மேற்கொள்ளவில்லை என்பதும் வேதனைக்குரிய விஷயம்.

அதிமுகவில் எம்ஜிஆருக்கு பிறகு மாபெரும் பலம் பொருந்தியவராக இருந்தவர் ஜெயலலிதா. ஆனால், அவரது மறைவுக்கு, பொதுமக்களின் மனம் கவர்ந்த தலைவர் அதிமுகவில் இல்லாத நிலையில் அதிமுக தேர்தல் பிரசாரத்திலும் ஒரு ஈடுபாடு காட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது

ஈபிஎஸ், ஓபிஎஸ் போன்றோர் ஜெ.இருந்தவரை, மக்களை நேரடியாக சந்திக்காத நிலையில், தற்போது நாடாளுமன்ற தேர்தல் காரணமாக மக்களை சந்திக்க கடுமையான சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

மறைந்த ஜெயலலிதாவுக்கு பிரசார வியூகங்களை வகுத்து கொடுத்தவர்  தற்போதைய கல்வி அமைச்சரான செங்கோட்டையன்.  அவரின் பிரசார வியூங்கள் ஜெயலலிதாவின் மதிப்பை மேலும் உயர்த்தியது. அவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதும், ஜெயலலிதாவின் முக வசிகரம், அவரது திறமையான பேச்சு போன்றவற்றால், வாக்களர்களை அநாயசமாக கவர்ந்து வாக்குகளை அள்ளினார்.

ஆனால், தற்போது, அவரது ஆலோசனையை கேட்க அதிமுகவில் எந்தவொரு தலைவரும் இல்லை என்பதே பெரும் சோக ஈபிஎஸ் ஒருபுறம் ஆளே இல்லாத சாலையில் தனிமையில் தேர்தல் பிரசாரம் செய்து வரும் நிலையில், ஓபிஎஸ் தனது மகனுக்காக தேனி தொகுதியிலேயே பலியாக கிடப்பதும் அதிமுக தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுக தேர்தல் அறிக்கையில் உள்ள தவறுகள், தற்போது ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்பதுபோல, தேர்தல் அறிக்கை  இணைப்பு வெளியிட்டதில் இருந்தே தற்போதைய அதிமுக தலைவர்களின் லட்சணம் உலகறிய செய்துள்ளது.

தேர்தல் களத்தில் பணியாற்றும், தமிழக அமைச்சர்கள் , நட்சத்திர பேச்சாளர்கள் எங்கே உள்ளனர், அவர்கள் தேரதல் பிரசாரத்தை மேற் கொள்கிறார்களா? மக்களை சந்திக்கிறார்களா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும் வகையிலோ, எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு திறமை யான வகையில் பதில்சொல்லி தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்து செல்லவோ, தற்போதைய அதிமுக தலைமை தடுமாறி வருவது எடப்பாடியின் பிரசாரத்தில் வெளிப்படுகிறது.

ஆட்சியை தக்க வைத்துக்கொள்வதிலேயே குறியாக உள்ள எடப்பாடி, நாடாளுமன்றத்தை விட சட்டமன்ற தேர்தல் வெற்றியையே  முக்கியமாக கருத்தில்கொண்டு பணியாற்றி வருவது, எதிர்க்கட்சிகளின் வெற்றி வாய்ப்பை மேலும் பிரகாசமாக்கி வருகிறது.

கடந்த தேர்தலின்போது ஜெயலலிதாவின் பிரச்சார பலம், ஒருங்கிணைந்த அதிமுகவின் வாக்கு வங்கி, அதிமுகவுக்கு மாபெரும் வெற்றியை தேடித்தந்த நிலையில், தற்போது டிடிவி தினகரன் அதிமுகவின் 10 சதவிகித வாக்கு வங்கிளை பிரித்து சென்றுவிட்டதால், அதிமுக தடுமாறி வருவது கண்கூடாக தெரிகிறது.