ங்காரா

மெரிக்காவின் எச்சரிக்கையை மீறி சிரியாவுக்குள் துருக்கி ராணுவம் நுழைந்து தாக்குதல்  நடத்தியதில் நூற்றுக் கணக்கானோர் பலியாகினர்.

கடந்த 2011 ஆம் ஆண்டு சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் தலைமையிலான அரசுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் தொடங்கியது. இந்தப் போரைப் பயன்படுத்தி ஐ.எஸ். பயங்கரவாதிகள் அங்குக் காலூன்றித் தாக்குதல் நடத்தினர். கிளர்ச்சியாளர்களை ஒடுக்க சிரிய அரசுக்கு ஆதரவாக ரஷிய ராணுவம் அங்குக் களம் இறங்கிய. அதே வேளையில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க ராணுவம் சிரிய ராணுவத்துடன் கைகோர்த்தது.

அமெரிக்கா மற்றும் சிரிய ராணுவத்துடன் இணைந்து குர்து இன போராளிகளும் ஐ.எஸ். பயங்கரவாதிகளை எதிர்த்து சண்டையிட்டனர்.  இந்நிலையில் சிரியாவின் அண்டை நாடான துருக்கியில் பயங்கரவாத தாக்குதல்களை நிகழ்த்தியுள்ள அந்த நாட்டு குர்து அமைப்பினருக்கு, சிரியா குர்துகள் ஆதரவு அளிப்பதாகத் துருக்கி குற்றம் சாட்டியது.

இதையொட்டி சிரியாவில் இருக்கும் குர்து இன போராளிகளைக் குறிவைத்து துருக்கி ராணுவம் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வந்தது. அதே வேளையில் குர்து இன போராளிகளுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து அவர்களுக்குப் பக்கபலமாக இருந்து வந்தது.

சிரியாவின் வடக்கு பகுதியில் இருக்கும் குர்து படையினரை விரட்டியடித்துவிட்டு ஒரு பாதுகாப்பு மண்டலத்தை உருவாக்கி அங்கு துருக்கியில் உள்ள 36 லட்சம் அகதிகளைக் குடியமர்த்த வேண்டும் என்று துருக்கி முடிவு செய்ததால் சிரியாவில் குர்து போராளிகளுக்கு எதிராக துருக்கி தீவிர ராணுவ நடவடிக்கையில் இறங்கி உள்ளது.

இத்தகைய சூழலில் கடந்த திங்கட்கிழமை அன்று சிரியாவில் முடிவில்லாமல் தொடரும் போரில் அமெரிக்கா இனியும் பங்கேற்காது எனவும், வடக்கு எல்லை பகுதியிலிருந்து அமெரிக்கப் படையினர் திரும்பப் பெறப்படுவார்கள் எனவும் டிரம்ப் அறிவித்தார்.

அந்த அறிவிப்பின்படி அமெரிக்கப் படை வீரர்கள் சிரியாவின் வடக்கு பகுதியில் இருந்து வெளியேறியதால் அமெரிக்காவின் ஆதரவுடன் அந்த பகுதியில் சண்டையிட்டு வந்த குர்து போராளிகளுக்கு இது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.  டிரம்பின் குடியரசுக் கட்சியினர் உள்ளிட்ட  பலர் சிரியாவில் படைகளைத் திரும்பப்பெற்றதற்காக விமர்சனங்களையும், கண்டனங்களையும் எழுப்பினர்.

டிரம்ப் தன் மீது எழுந்த விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் மனிதத் தன்மையற்ற எதையாவது துருக்கி செய்தால், எல்லை மீறி சிரியாவுக்குள் நுழைந்தால், அதன் பொருளாதாரம் அழிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

இருந்தும் அமெரிக்காவின் எச்சரிக்கையையும் மீறி துருக்கி நேற்று முன்தினம் சிரியாவின் வடக்கு பகுதியில் குர்து இன போராளிகளைக் குறிவைத்து ஏவுகணைகள் மற்றும் குண்டுகளை வீசி பயங்கர தாக்குதல் நடத்தின.  அத்துடன் நேற்று சிரிய எல்லைக்குள் துருக்கி ராணுவம் நுழைத்து, தரைவழியாகவும் தாக்குதல் நடத்தியது.

இந்த அத்துமீறிய தாக்குதலில் நூற்றுக் கணக்கானோர் கொல்லப்பட்டதாகவும் லட்சக்கணக்கானோர் நாட்டை விட்டு ஓடி விட்டதாகவும் கூறப்படுகிறது.   பிரான்ஸ் மற்றும் அரபு நாடுகள் உள்ளிட்ட பல நாடுகள் துருக்கியின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்த விவகாரம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு குழு அவசர கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்தி உள்ளது.  ஐ.நா. சபைக்கு துருக்கி இது குறித்து அனுப்பிய கடிதத்தில் “தனது தற்காப்புக்காக சிரியாவின் வடக்கு பகுதியில் துருக்கி சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. துருக்கி எல்லை பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பயங்கரவாதத்துக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.