டில்லி:

பெட்ரோல், டீசல் ஆகியவற்றை ஜிஎஸ்டி அமைப்பின் கீழ் கொண்டு வருவது குறித்து மாநில அரசுகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்’’ என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.

ராஜ்யசபாவில் கேள்வி நேரத்தின் போது, காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் பேசுகையில், ‘‘ பெட்ரோல், டீசல் ஆகியவற்றை ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வருவது குறித்து மத்திய அரசின் நிலைப்பாடு என்ன?’’ என்றார்.

இதற்கு நிதியமைச்சர் அருண் ஜெட்லி பதில் கூறுகையில், ‘‘பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் காஸ் ஆகியவற்றை ஜிஎஸ்டி அமைப்பின் கீழ் கொண்டு வருவதற்கு மத்திய அரசு விருப்பமாக உள்ளது. எனினும் பெட்ரோலிய பொருட்களுக்கு பல்வேறு மாநிலங்களிலும் பல்வேறு விகிதங்களில் மதிப்புக்கூட்டு வரி வசூலிக்கப்படுகிறது.

எனவே இவற்றை ஜிஎஸ்டி.யின் கீழ் கொண்டு வருவதற்கு சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும். மாநில அரசுகளின் ஒப்புதலுடன் மட்டுமே இதை செயல்படுத்த முடியும். அனைத்து மாநில அரசுகளின் கருத்துகளைக் கேட்டு அதனடிப்படையில் முடிவு எடுக்கப்படும்’’ என்றார்.