கோவை: கோவை திமுக பிரமுகர் வீடு உள்பட உள்பட தமிழகத்தில் 22 இடங்களில் வருமானவரித் துறை அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவையில் மாநகர மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பையா கவுண்டர் என்பவரது வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. 6 அதிகாரிகள்  அங்கு சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்ததிமுகவினர், அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வருமான வரி சோதனையை  கண்டித்து அப்பகுதி திமுகவினர், சோதனை நடைபெறும் இடத்தில் முழக்கமிட்டு வருகின்றனர்.
அதைத்தொடர்ந்து, ஈரோட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கல்வி நிறுவனத்தில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகிறது. வரி ஏய்ப்பு புகார் உள்பட   கல்வி நிறுவனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக எழுந்த புகாரையடுத்து  வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகிறது.
இதேபோன்று சென்னை, திருப்பூரிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஒரே நேரத்தில்  மொத்தம் 22 இடங்களில் சோதனை  நடைபெற்று வருகிறது.