பிரபல நடிகர் விஜய்-ஐ வருமான வரி முறைகேடு தொடர்பாக, மாஸ்டர்  படப்பிடிப்பு தளத்தில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணைக்குஅழைத்துச் சென்றுள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல தமிழ் நடிகரான விஜய், சமீப காலமாக, தனது படங்களில் மத்திய மாநில அரசுக்கு எதிரான அரசியல் வசனங்களை பேசி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்… இதனால், அவர் அரசியலில் குதிக்க திட்டமிடுவதாக கூறப்படுகிறது.

இன்று காலை முதலே  தமிழகத்தில் பிரபல சினிமான நிறுவனமான ஏஜிஎஸ் திரைப்பட நிறுவனங்கள் மற்றும், சினிமா பைனான்சியர்  அன்புசெழியன் உள்பட அவர்களின் வீடுகள், நிறுவனங்கள் என பல இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தற்போது நெய்வேலி பகுதியில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்த விஜயை வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

இன்று  நெய்வேலி என்எல்சியில் விஜய், விஜய் சேதுபதி மோதும் கிளைமேக்ஸ் காட்சிகள்  எடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் விஜயை வருமான வரித்துறையினர் அழைத்துச் சென்றுள்ளதால், மாஸ்டர்’ படப்பிடிப்பு பாதியில்தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

‘பிகில்’ பட சம்பள விவகாரம் தொடர்பாக நடிகர் விஜய்யிடம் விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.  விஜய் நடித்த பிகில் படத்தை  ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்தது குறிப்பிடத்தக்கது.