பொருளாதார சிந்தனையாளர் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி எழுதும் வெற்றியின் அளவுகோல் – வருமானவரி!  புதிய தொடர் விரைவில் 

முதன் முறையாக, வருமான வரி சட்டம் – எளிய தமிழில்; இனிய நடையில்!
இந்தியாவில், தமிழ்நாட்டில் எத்தனையோ வரிகள்.
நம் ஒவ்வொருவரின் மீதும் கட்டாயம் ஆக்கப் பட்டுள்ளன.
ஆனாலும், சாலை வரி, சொத்து வரி, தண்ணீர் வரி என்றெல்லாம்
யாரேனும் சொன்னால், கேட்டால் வெகு இயல்பாகக் கடந்து போகிறவர்கள்,
வருமான வரி என்றால் மட்டும் உடனே உன்னிப்பாக கவனிக்கிறார்களே.. அது ஏன்…?
‘இன்றுள்ள’ நிலைமையில், நாடு மொத்தமும் திரும்பிப் பார்க்கிற,
‘சொன்னாலே சும்மா அதிருது இல்ல..?’ என்கிற வசனத்துக்கு முற்றிலும்
பொருந்துகிற ஒற்றைச் சொல் – வருமானவரி!
ஒருவர் தன் வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டார் என்பதற்கான அளவுகோலாக
எதைச் சொல்லலாம்..? எதைக் கொள்ளலாம்..?
அவரின் கல்வித் தகுதி..? அவர் வகிக்கும் பதவி..?
அவரின் குடும்ப சூழல்..? பிள்ளைச் செல்வம்..? சமூக அந்தஸ்து…?

இவை எல்லாம்தான். சந்தேகம் இல்லை. ஆனாலும் வெகு எளிதில் ஒருவரின் வெற்றியை அளவிட
உதவியாக இருப்பது அவர் செலுத்தும் வருமான வரிதான்.
ஒருவர், லட்சங்களில் வருமானவரி செலுத்துகிறார். மற்றொருவர் ஆயிரங்களில் செலுத்துகிறார்.
வேறொருவர் – சில நூறுகள். ஒருவர், வருமான வரி செலுத்துகிற நிலையை எட்டவே இல்லை.
சொல்லுங்கள்… அவரின் பொருளாதார நிலைமை புரிந்து விட்டதா இல்லையா…?
பணத்தை மையமாக வைத்து சுழல்கிற வாழ்க்கை முறைக்கு நாம் அடிமை ஆகி விட்டோம்.
பொருளாதார வசதி, வல்லமைதான், ஒருவரின் அந்தஸ்தை நிர்ணயிக்கிறது – உலகம் முழுவதுமே.
அப்படியானால்…? வருமானம். அது ஒன்று மட்டுமே ஒருவரை தலை நிமிர்ந்து நடக்க வைக்கிறது.
இதுதான் யதார்த்தம். இதற்கு மாறாக சொல்லப் படுவது எல்லாம், மன்னிக்கவும் –
வாழ்க்கைக்கு உதவாத வெற்றுப் பிரசங்கங்கள்; வறட்டுத் தத்துவங்கள்.
இந்தத் தொடரை வாசிக்கும் ஒவ்வொருவரும் நாளடைவில்
பல லட்சங்களை வருமான வரியாக செலுத்த
வாயார உளமார வாழ்த்துகிறோம்.
இனி… வருமானவரி வலைக்குள் புகுவோமா…?