நம் நாட்டுத் (வீட்டுத்) திருவிழா

 

பா. தேவிமயில் குமார்

 

நேசித்திடுவோம்,

நம் தேசத்தினை

சுவாசத்திற்கு இணையாகவே !

 

இன்றிலிருந்து,

போராட்ட வரலாற்றை

புரட்டிப் பார்ப்போம்

வரலாறாக அல்ல,

வாழ்க்கைப் பாடமாக !

 

இன்றிலிருந்து,

ஒருவரையொருவர்

வாழ்த்திடுவோம் !

வல்லரசாக, நாம்

வரவேண்டுமென !

 

சர்வதேச அரங்குகளில்

சாதனை புரிந்திட, நம்

சந்ததிகளுக்கு நல்ல

சக்தியூட்டுவோம் !

 

இனி,

வடக்கு தெற்கு என

விவாதங்கள் செய்யாமல்,

வேறுபட்டு நிற்காமல்,

ஒன்றாக இணைந்திருப்போம் !

 

இனி, பாரதத்தின்

பொதுநூல், புனித நூல் என

போராட்ட வரலாறையும்,

அரசியலமைப்பையும்

அறிவித்திடுவோம் !

 

இனி,

விண்வெளி சாதனையையும்  

விவசாயத்தையும் இங்கு

ஒன்றென எண்ணி

வென்றிடுவோம் ! வறுமையை !

 

இனி !

ஓட்டினைப் பெற

ஓட்டை வழிகளைக்

கடை பிடிப்பவரை

கண்டிப்பாக தடை செய்திடுவோம் !

 

இனி, இங்கே,

எல்லாக் கடவுளும்,

வாழ்ந்திடும்,

தெய்வீக தேசமிதுவென

தெளிவுபடுத்துவோம்

தெரியாதவர்க்கும் !

இன்று,

தீவிரவாதமும்,

மதவாதமும்,

தேவையில்லையென

தெய்வங்களைத்

தொழுது வணங்கிடுவோம் !

 

அதோடு,

நோய்த் தொற்றையும்

இயற்கை சீற்றங்களையும்

எதிர்கொள்ள,

எங்களுக்கு சக்தி வேண்டும்

எனவும் வணங்கிடுவோம் !

 

நம் நாட்டின்

காலநிலை காட்டும்

வேறுபாட்டினை – நம்

மனநிலை காட்டிடும், இம்

மண்ணின் ஒருமைப்பாட்டினை !

 

இனி,

அரசியலையும், அறிவியல் போல

அறிவுப்பூர்வமாய் அணுகுவோம் !

அது இனி படித்தவர்கள் ஏறும்

படிக்கட்டாக மாறட்டும் !

 

இன்றிலிருந்து,

ஒற்றுமை எனும்

பாரிஜாத மலர்களால்

அலங்கரிப்போம், நம்

பாரதத் தாயை !

 

இன்றிலிருந்து !

நேர் மறை எண்ணங்களை

நம் நெஞ்சோடு வளர்ப்போம் !

அது, நம் நாட்டின் நாளைய

அடித்தளமாய் மாறி நிற்கட்டும் !

 

இனி,

பழம் பெருமைகளை இளம்

பாரதத்தின் புதல்வர்க்கு,

புரியவைப்போம், நாம்

புள்ளினமல்ல புலிக்குட்டிகளென  

புரிந்துகொள்ளட்டும் அவர்கள் !

 

அதன்,

துவக்கமாக,

புன்னகை, புத்தாடை

பொன்னகை அணிந்து,

போற்றி கொண்டாடுவோம்

பாரதத்தின் விழாவை !

 

இனி, இது நாட்டுத் திருவிழா

என எண்ணிடாமல்,

நம் வீட்டுத் திருவிழாவென

நாளும் கொண்டாடுவோம் !

 

இன்றிலிருந்து….

இல்லந்தோறும், மட்டுமல்ல

உள்ளந்தோறும் கூட

ஏற்றிடுவோம் ஒளி விளக்குகளை !

ஜெய் ஹிந்த் ! வந்தே மாதரம் !

வாழ்க பாரதம் !

– பா. தேவிமயில் குமார்