டெல்லி: இந்தியா, சீனா ராணுவம் இடையே அடுத்த சுற்று பேச்சு வார்த்தைக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

லடாக் எல்லையில் இந்தியா, சீனா இடையே 5 மாதங்களாக பிரச்னை நீடித்து வருகிறது. அதனை முடிவுக்கு கொண்டு வர இருதரப்பிலும் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 21ம் தேதி நடைபெற்ற 6ம் கட்ட  பேச்சுவார்த்தையின் முடிவில் இரு தரப்புகளும் மேலும் படைகளை அனுப்பக்கூடாது என முடிவு எடுக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக 7ம் கட்ட பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இது செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா கூறியதாவது:
ராணுவ அதிகாரிகள் இடையேயான பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொண்டது போல, 7ம் கட்ட  பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகளில் இரு தரப்பும் ஈடுபட்டு உள்ளன. இதன் மூலம் எல்லையில் இருந்து விரைவாக படைகளை விலக்கவும், அமைதியை ஏற்படுத்தவும் முடியும் என்றார்.