புதுடெல்லி:
35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு சர்வதேச தொழிலாளர் அமைப்பில் தலைமைப் பதவி கிடைத்துள்ளது.

சர்வதேச தொழிலாளர் அமைப்புக்கும் இந்தியாவுக்கும் இடையே உள்ள நூறு ஆண்டு கால ஆக்கப்பூர்வமான உறவில் தற்போது ஒரு புதிய அத்தியாயம் படைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் ஆளுகைக் குழு தலைமைப் பதவி 35 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியாவுக்குத் தற்போது வழங்கப்பட்டுள்ளது. மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை செயலாளர் அபூர்வா சந்த்ரா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், 2020 அக்டோபர் முதல் 2021 ஜூன் வரையிலான காலகட்டத்தில் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் ஆளுகைக் குழுவின் தலைவராகச் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் உயர்ந்த நிர்வாக அமைப்பாக இந்த ஆளுகைக் குழு செயல்படுகிறது. கொள்கைகள், திட்டங்கள், நிகழ்ச்சிகள், நிதி ஆகியவற்றை இக்குழுவே தீர்மானிக்கிறது. இதற்கான இயக்குநர் ஜெனரலையும் தேர்வு செய்யும் அதிகாரமும் இதற்கு உண்டு. சர்வதேச தொழிலாளர் அமைப்பில் தற்போது 187 உறுப்பினர்கள் உள்ளனர். வரும் நவம்பர் மாதம் ஜெனிவாவில் நடைபெறவிருக்கும் ஆளுகைக் குழுவின் கூட்டத்திற்கு அபூர்வா சந்த்ரா தலைமையேற்பார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும் உறுப்பு நாடுகளின் மூத்த அதிகாரிகளுடன் உரையாடும் வாய்ப்பு அபூர்வா சந்த்ராவுக்குக் கிடைத்துள்ளது.


தொழிலாளர் சந்தையின் கடினத்தன்மையை அகற்றுவதற்கு பங்கேற்பு நாடுகளால் எடுக்கப்படும் மாற்றங்களுக்கான முயற்சிகளை ஊக்குவிக்கும் தளமாகவும் இக்கூட்டம் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அமைப்புசாரா தொழில் அல்லது அமைப்புசார்ந்த தொழில் என எந்தத் தொழிலில் பணியாற்றினாலும் அனைத்து ஊழியர்களுக்கும் சர்வதேச அளவிலான சமூகப் பாதுகாப்பு அவசியம் என்பதை வலியுறுத்தி இக்கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.