வாஷிங்டன்: உலக வங்கி வெளியிட்டுள்ள ‘மனித மூலதனக் குறியீடு’ பட்டியலில், இந்தியாவிற்கு 116வது இடம் வழங்கப்பட்டுள்ளது.

மொத்தம் 174 நாடுகளில், குழந்தைகளின் கல்வியறிவு, அவர்களின் ஆரோக்கியம் போன்றவைகளின் அடிப்படையில், மனித மூலதன குறியீட்டுப் பட்டியலை வெளியிட்டு வருகிறது உலக வங்கி.

மனித மூலதனக் குறியீட்டில், இந்தாண்டு இந்தியாவின் பங்கு 0.49% என்பதாக உயர்ந்துள்ளது. இது கடந்த 2018ம் ஆண்டில் ௦.44% என்பதாக இருந்தது. இந்த வகையில், ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நாடுகளில், இந்தியா 116வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்தாண்டு 115வது இடத்தில் இருந்தது.

உலக வங்கி தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது; கொரோனா பாதிப்புக்கு முன், குறைந்த வருவாய் உள்ள நாடுகளில் கூட, படித்த மற்றும் ஆரோக்கியமான குழந்தைகளின் சதவிகிதம் அதிகரித்திருந்தது. ஆனால், கொரோனாவால் இந்த வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் மாணாக்கர் சேர்க்கை, ஆரோக்கியத்தில் மேம்பாடு, குழந்தைகளின் வாழ்நாள் விகிதம் ஆகியவற்றில் கொரோனா பரவல் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது.

பத்தாண்டுகளாக கண்டு வந்த வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. பொருளாதார தாக்கம், குறிப்பாக, பெண்களையும், சாதாரண குடும்பங்களையும் பெரிதும் பாதித்துள்ளது. ஏராளமானோர் வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். 100 கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி கற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இத்தகைய நிலையை மாற்றி, நிலையான மனித மூலதன வளர்ச்சிக்கு தேவையான முதலீடுகளையும், திட்டங்களையும், உலக நாடுகள் மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.