மெல்போர்ன்: பாக்ஸிங் டே டெஸ்ட்டில், இந்திய அணிக்கு வெற்றிவாய்ப்பு அதிகமிருப்பதாக கணித்துள்ளார் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மார்க் டெய்லர்.

விராத் கோலி உள்ளிட்டோரின் விலகலால், இந்திய அணி பலவீனமடைந்திருப்பதாக ஜஸ்டின் லாங்கர் போன்றோர் கூறிவரும் நிலையில், மார்க் டெய்லரின் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.

அவர் கூறியுள்ளதாவது, “மெல்போர்ன் மைதானத்தில், விராத் கோலி இல்லையென்றாலும், ரஹானே மற்றும் புஜாரா உள்ளிட்டவர்கள் அதிக ரன்களை குவிக்க வாய்ப்புள்ளது. இந்திய பேட்ஸ்மென்கள் அதிக ரன்களை அடிக்கும்பட்சத்தில், இந்திய பவுலர்களால் எளிதான வெற்றியைத் தேடித்தர முடியும்.

ஏனெனில், எதிரணியின் 20 விக்கெட்டுகளைக் கைப்பற்றும் அளவிற்கு இந்திய பவுலர்களிடம் திறமை உள்ளது. முதல் டெஸ்ட்டில் இந்திய அணி தோற்றதை வைத்து, முழு டெஸ்ட் தொடரையும் மதிப்பிடக்கூடாது” என்றுள்ளார் அவர்.