கவுகாத்தி: இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி-20 போட்டி, அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் நாளை(4 ஜனவரி) நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டியில் சில மாதங்கள் இடைவெளிக்குப் பிறகு வேகப்பந்து நட்சத்திரம் பும்ரா கலந்துகொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விராத் கோலி தலைமையில் இந்த டி-20 தொடரில் இந்தியா பங்கேற்கிறது. இரண்டாவது போட்டி 7ம் தேதி இந்தூரிலும், மூன்றாவது போட்டி 10ம் தேதி புனேவிலும் நடைபெறவுள்ளது.

இதற்கு முன்னர், கடந்தாண்டில், உள்நாட்டில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த டி-20 தொடரில் தோற்றது இந்தியா. பின்னர், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு எதிரான தொடரில் வென்றது இந்தியா.

நாளை நடைபெறவுள்ள போட்டியானது, 2020ம் ஆண்டில் இந்திய அணி பங்குபெறும் முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியாகும். இந்தியா – இலங்கை இதுவரை மோதிய மொத்தம் 16 டி-20 போட்டிகளில் இந்தியா 11 போட்டிகளை வென்றுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.