ஸ்ரீஹரிகோட்டா:
ந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவாண் விண்வெளி மையத்திலிருந்து சிஎம்எஸ்-01 தகவல் தொடர்பு செயற்கைக்கோளுடன், பிஎஸ்எல்வி-சி50 ராக்கெட் வெற்றிகரமாக இன்று விண்ணில் பாய்ந்தது.

சதீஸ் தவாண் விண்வெளி மையத்தின் 2-வது ஏவுதளத்திலிருந்து பிஎஸ்எல்வி-சி50 ராக்கெட் ஏவுவதற்காக நேற்று பிற்பகல் 2.41 மணிக்கு கவுண்ட் டவுன் தொடங்கியது. 24 மணி நேர கவுண்ட் டவுன் முடிந்ததையடுத்து, இன்று மாலை 3.41 மணிக்கு பிஎஸ்எல்வி சி50 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாகக் கடந்த 11 மாதங்களாக ராக்கெட் ஏவும் பணியை இஸ்ரோ நிறுத்தி வைத்திருந்தது. இதையடுத்து கடந்த மாதம் 7-ம் தேதி பிஎஸ்எல்பி சி49 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்த ராக்கெட்டில் இந்தியாவின் இஓஎஸ்-1 செயற்கைக்கோள் உள்பட மொத்தம் 9 வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் விண்ணில் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டன. அதன் தொடர்ச்சியாக இன்று சிஎம்எஸ்-01 தகவல் தொடர்புக் கோளை ஏந்தி பிஎஸ்எல்வி-சி50 ராக்கெட் இன்று விண்ணில் பாய்ந்தது.

சிஎம்எஸ்-10 செயற்கைக்கோள் இஸ்ரோவின் 42-வது தகவல் தொடர்பு செயற்கைக்கோளாகும். இந்தத் தகவல் தொடர்பு செயற்கைக்கோள் மூலம் சி-பேண்ட் அலைவரிசையை இந்தியா மட்டுமின்றி, அந்தமான் நிகோபர், லட்சத்தீவுகளிலும் அலைவரிசையைப் பெற முடியும்.

கடந்த 2011-ம் ஆண்டு அனுப்பப்பட்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோளின் காலம் முடிந்ததையடுத்து அதற்குப் பதிலாக இந்த செயற்கைக்கோள் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த செயற்கைக்கோளின் ஆயுள் காலம் 7 ஆண்டுகளாகும்.

பிஎஸ்எல்வி-சி50 ராக்கெட் பிஎஸ்எல்வி வரிசையில் 22-வது ராக்கெட்டாகும். இதில் 6 வகையான உந்துசக்தி மோட்டார்கள் இணைக்கப்பட்டுள்ளன. ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்வெளிக்கு அனுப்பிவைக்கப்படும் 77-வது ராக்கெட் இதுவாகும்.

விண்ணில் சீறிப்பாய்ந்த பிஎஸ்எல்வி-சி50 ராக்கெட் வெற்றிகரமாக பூமியின் நீள்வட்டப் பாதையில் சிஎம்எஸ்-01 செயற்கைக்கோளை நிலைநிறுத்தியது என்று இஸ்ரோ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.