பீஜிங்

பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே ஒரு பிரம்மாண்ட அணையைக் கட்டி நீர்மின் திட்டத்தைச் செயல்படுத்தச் சீனா எடுத்த முடிவால் இந்தியா பாதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

மாதிரி புகைப்படம்

சீன மின்சக்தி கட்டுமான தலைவர் யான் ஹியாங் கடந்த வாரம் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், “சீனா யார்லங் ஜாங்போ நதியின் (பிரம்மபுத்திரா நதியின் சீனப்பெயர்) குறுக்கே பிரம்மாண்டமான அணையைக் கட்டி ஒரு மிகப்பெரிய நீர்மின் திட்டத்தை உருவாக்க உள்ளது. இது உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் நீர்வளத்தைப் பயன்படுத்தும் வகையிலும் அமையும்.

வரும் 2021 முதல் 025 ஆம் ஆண்டுவரை சீனாவின் 14-வது ஐந்தாண்டுத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.   இந்த ஐந்தாண்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த அணைக் கட்டும் திட்டம் இருக்கும். அத்துடன்  சீனாவின் ஆளும் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியின் நீண்டகால இலக்கில் இதுவும் ஒன்றாகும்” எனத் தெரிவித்துள்ளார்.

சீன நாட்டின் குளோபல் டைம்ஸ் என்னும் பிரபல நாளேடு பிரம்மபுத்திரா அணையின் குறுக்கே கட்டப்படும் இந்த அணை குறித்து, ”’திபெத் பகுதியின் கடைசி மாகாணமான அருணாச்சலப் பிரதேசத்தின் எல்லைப்பகுதியான மேடாக் மாகாணத்தில் உள்ள யார்லங் ஜாங்போ நதியின் (பிரம்மபுத்திரா நதி) குறுக்கே ஒரு பிரம்மாண்டமான அணை கட்டப்பட உள்ளது.

திபெத்தில் பாயும் யார்லங் ஜாங்போ நதி மிகுந்த நீர்வளம் கொண்டதாகும். அங்கு 2 ஆயிரம் அடி மீட்டர் உயரத்திலிருந்து பாயும் நதியின் நீர் மூலம் 7 கோடி கிலோவாட் வரை மின்சாரம் எடுக்க முடியும். சுருக்கமாகச் சொன்னால் ஹூபே மாகாணத்தில் உள்ள மூன்று ஜார்ஜ் மின்நிலையங்களைவிட அதிகமாக மின்சாரம் எடுக்க முடியும்.

இவ்வாறு அமைக்கப்படும் மின்நிலையத்திலிருந்து கிடைக்கும் மின்சாரம் மூலம் சீனாவின் ஒட்டுமொத்த மின் தேவையில் 30 சதவீதத்தை நிறைவு செய்ய முடியும்.

இதில் கிடைக்கும் 30,000 கோடி கிலோவாட் சுத்தமான மின்சாரம் மூலம் சீனாவின் கார்பன் வெளியீட்டைக் குறைக்கும் இலக்கை 2030-ம் ஆண்டுக்கு முன்பாக எட்டி 2060-ம் ஆண்டுக்குள் முழுமையாக கார்பன் வெளியீட்டை நிறுத்த முடியும். இத் திட்டத்தின் மூலம் திபெத் சுயாட்சி அரசுக்கு ஆண்டுக்கு 300 கோடி அமெரிக்க டாலர்கள் வருவாய் கிடைக்கும்”.  எனத் தெரிவித்துள்ளது.

சீன அரசு இந்தத் திட்டத்தின் முழுமையான விவரங்களை இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்றாலும், பிரம்மபுத்திராவின் இடையே அணையைக் கட்டும் சீனாவின் திட்டம் இந்தியா, வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.. இந்த திட்டத்தால் பிரம்மபுத்திரா பாயும் நாடுகளான இந்தியா, வங்கதேசம் ஆகியவற்றுக்குச் செல்லும் நீரைத் தடுத்து நிறுத்தப்பட்டு சர்வதேசப் பிரச்சினையாக மாறலாம்.

ஏற்கனவே சீன அரசிடம் பிரம்மபுத்திரா நதி நீரை நம்பியிருக்கும் நாடுகள் நலனுக்கு முன்னுரிமை அளித்துச் செயல்பட வேண்டும் என அரசிடம் இந்திய அரசு சார்பில் பலமுறை வலியுறுத்தப்பட்டுள்ளது. அப்படி இருக்க இப்போது சீனா இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த உள்ளது.

திபெத்தில் கடந்த 2015-ம் ஆண்டிலிருந்து சீனா சார்பில்  1500 கோடி டாலர் மதிப்பில் ஜாங்மு நீர்மின் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சீனா இது தவிர டாகு, ஜீக்ஸ், ஜியாச்சா ஆகிய பகுதிகளிலும் அணைகளை உருவாக்கியுள்ளது.

இவ்வாறு கட்டப்பட்ட அணைகள் அனைத்தும் ஆறுகளின் மேல் மற்றும் நடுப்பகுதி இணைவில் அமைக்கப்பட்டுள்ளது. இப்போது, முதல் முறையாகக் கீழ் நோக்கிப் பாயும் தண்ணீரைத் தடுத்து நிறுத்தி அணை கட்டப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.