டில்லி

யு டியுப் வலை தளத்தை அதிகம் பயன்படுத்தும் நாடாக இந்தியா ஆகி உள்ளது.

யு டியூப் என்பது பல்வேறு வீடியோக்கள் உள்ள ஒரு வலை தளமாகும். இந்த வலை தளத்தில் அரசியல், கல்வி, பொதுத் துறை, பாடல்கள், திரைப்படங்கள், சமையல் குறிப்புக்கள், அழகு குறிப்புக்கள் என அனைத்து பிரிவு வீடியோக்களும் உள்ளன. இதைத் தவிர பயணாளிகள் தங்கள் கூகுள் கணக்கு மூலம் தங்களது சொந்த வீடியோக்களையும் மற்றவர்களுடன் பகிரவும் முடியும்.

இந்த வலைத் தளம் வெகு நாட்களாக அமெரிக்கர்களின் மனம் கவர்ந்த தளமாக விளங்கியது. ஆனால் தற்போது இந்திய பயனாளிகள் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது. தற்போது  இந்த பயனாளிகள் எண்ணிக்கையில் இந்தியா அமெரிக்காவை பின் தள்ளி உள்ளது.

இவ்வாறு பயனாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பதன் காரணம் தற்போது இந்தியாவில் இணைய உபயோக கட்டணம் பெருமளவில் குறைந்துள்ளதும் பல வசதியான மொபைல்கள் மலிவு விலையில் கிடைப்பதுமே ஆகும். கடந்த 2-3 வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் ஒரு ஜிபி இணைய பயன்பாட்டுக்கு குறைந்த பட்சமாக ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டி இருந்தது.

ஆனால் 2016 ஆம் வருடம் செப்டம்பரில் முகேஷ் அம்பானியின் ஜியோ அறிமுகம் ஆனது. அப்போது முதல் ஒரு ஜிபி உபயோகக் கட்டணம் ரூ.10 ஆக மாறியது. அதாவது முந்திய கட்டணத்தை போல் 10 ல் ஒரு மடங்கு குறைந்தது. வியாபார போட்டியினால் மற்ற தொலை தொடர்பு நிறுவனங்களும் கட்டண குறைப்பை அமுல் செய்தன. அத்துடன் பல இணைய வசதிகள் உள்ள மொபைல்களும் இந்தியாவில் மலிவாக தற்போது கிடைத்து வருகின்றன.

யு டியூபில் ஆங்கிலம் மட்டுமின்றி இந்திய மொழிகள் குறிப்பாக பல மாநில மொழிகளின் வீடியோக்களும் கிடைத்து வருகின்றன. இந்தியாவில் உள்ள 26.5 கோடி பயனாளிகளில் 95% பேர் உள்ளூர் மொழிகளில் உள்ள வீடியோக்களை ரசிக்கின்றனர்.

பல இந்தியர்கள் யூடியூபில் மாநில மொழி வீடியோக்களை மட்டும் பார்த்து வருவதற்கு இந்த வலைதளத்தில் கிடைக்கும் இந்திய மாநில மொழி வீடியோக்களும் முக்கிய காரணம் ஆகும். ஆகவே தற்போது உலக அளவில் யூ டியூப் பயனாளிகளில் பெரும்பாலானோர் இந்தியரகளாக உள்ளனர்.