ந்தியாவில் சில்லரை வணிகத்தில் பெருத்த லாபம் ஈட்டும் நிறுவனங்கள் நீங்கள் நினைப்பது போல ரிலையன்ஸ் ரீட்டெய்லோ, அல்லது பிக்பஜாரோ அல்ல, இந்திய ராணுவத்தின் கேண்டீன் ஸ்டோர்கள் (சிஎஸ்டி) என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
defence canteen
ஆம், கடந்த 2014-15 நிதியாண்டில் நமது பாதுகாப்புத் துறை தனது கேண்டீன் ஸ்டோர்கள் மூலம் 13,709 கோடி லாபம் ஈட்டி நாட்டின்  அத்தனை பெருமுதலாளிகளையும் அதிர வைத்திருக்கிறது.
கடந்த 2014-15 நிதியாண்டில் பிக்பஜார் மற்றும் ஈசோன் நிறுவனங்கள் ஈட்டிய லாபம் சுமார் 153 கோடி, ரிலையன்ஸ் ரீட்டெய்ல் ஈட்டிய லாபம் சுமார் 159 கோடி. இவர்கள் அனைவரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு 236 கோடி லாபத்தை அள்ளியிருக்கிறது ராணுவ கேண்டீன்.
இத்தனைக்கும் ஒரு பொருளுக்கு ராணுவ கேண்டீன்களில் நிர்ணயிக்கப்படும் மார்ஜின் அளவு, பிக்பஜார் போன்ற தனியார் நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது வெகு சொற்பமே. தனியார் நிறுவனங்கள் 8% – 18% வரை ஒரு பொருளுக்கு மார்ஜின் அளவாக நிர்ணயித்திருக்கும்போது ராணுவ கேண்டீன் நிர்ணயித்திருப்பது வெறும் 1% மட்டுமே.
மார்கெட்டிங் என்ற பெயரில் விளம்பரங்களுக்கு அதிக பணத்தை செலவிட்டு அந்த காசை வாடிக்கையாளர்கள் தலையில் கட்டும் செயலை இந்திய ராணுவ கேண்டீன் செய்யாமல் இருப்பதே குறைந்த மார்ஜின் நிர்ணயத்தை சாத்தியமாக்கியிருக்கிறது.

குறைந்த மார்ஜினை நிர்ணயித்து பெருத்த லாபம் சம்பாதிக்க மேலும் ஒரு காரணம் தனியார் பெருநிறுவனங்களைப் போல நெருக்கடி மிகுந்த பிஸியான நகர மையங்களில் கடை விரிக்காமல் மக்கள் எளிதில் அணுகும் அளவுக்கு அவர்கள் அருகாமையிலேயே கேண்டீன்களை நடத்துவதுதான். நாடு முழுவதும் 3,900 இடங்களில் ராணுவ கேண்டீன்கள் நிறுவப்பட்டு விற்பனைகள் கன ஜோராக நடந்துவருகிறது.
ராணுவ கேண்டீனில் விற்கப்படும் 4,500 வகையான பொருட்களில் அதிகபட்சமாக 26% விற்பனையாவது மதுபான வகைகளாகும். இதுபோக தொலைக்காட்சி பெட்டிகள், ஆடியோ/வீடியோ சிஸ்டம், குளிர்பதனப்பெட்டி, சோப்புகள், ஷாம்புகள் போன்ற பொருட்கள் மிக மிக மலிவு விலைக்கு விற்கப்படுகிறது. இவ்வளவு ஏன் கார்கள்கூட மார்க்கெட் விலையைவிட மிகக் குறைந்த விலைக்கு இங்கு விற்கப்படுகிறது.
விற்பனை லாபம் ஒரு பக்கம் இருந்தாலும், நெருக்கடியான சூழல்களில் இந்திய ராணுவ கேண்டீன் ஆற்றிய பங்கு அளப்பரியது. 1948-ஆம் ஆண்டு பணியிலிருந்தும் மற்றும் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்காக துவங்கப்பட்ட ராணுவ கேண்டீன்கள் சீன, பாகிஸ்தான் போர்களின்போது சூறாவளிபோல செயல்பட்டு போர்முனையில் இருக்கும் வீரர்களின் தினசரி தேவைகளை பூர்த்தி செய்தது மாபெரும் சாதனையாகும். அதேபோல இயற்கை பேரிடர் காலங்களிலும் ராணுவ கேண்டீன் தனது பணியை சீரிய முறையில் ஆற்றிவருவது பாராட்டுக்குரியதாகும்.