டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் இதுவரை இல்லாத அளவில் உச்சம் பெற்றுள்ளது. தினசரி பாதிப்பு 4லட்சத்தை கடந்து விட்ட நிலையில், தினசரி உயிழப்பும் 4 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. உலக அளவில் தினசரி பாதிப்பில் இந்தியா முதலிடத்தில் தொடர்ந்து வருகிறது. உலகச் சுகாதார அமைப்பின் புள்ளி விவரங்களின் படி கடந்த வாரத்தில் மட்டும் உலக கொரோனா பாதிப்பில் இந்தியாவில் மட்டும் 46% பதிவாகியுள்ளது. உலக கொரோனா மரணத்தில் 25% இந்தியாவில் பதிவாகியுள்ளது.

இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும்  கடந்த 24 மணிநேரத்தில் 4 லட்சத்து 12 ஆயிரத்து 262 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.  இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 10 லட்சத்து 77 ஆயிரத்து 410 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று மட்டும் 3,980 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,30,168 ஆக உயர்ந்து உள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 3 லட்சத்து 29 ஆயிரத்து 113 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியே 72 லட்சத்து 80 ஆயிரத்து 844 ஆக உயர்வடைந்து உள்ளது.
தற்போதைய நிலையில், 35,66,398 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாடு முழுவதும் இதுவரை  16 கோடியே 25 லட்சத்து 13 ஆயிரத்து 339பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 18-44 வயதினர் 2.4 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்தியாவில் இதுவரை 29 கோடியே 67 லட்சத்து 75 ஆயிரத்து 209 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன என்றும், அதில் நேற்று ஒருநாளில் மட்டும் 19,23,131 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.

 அசாம், மேற்கு வங்கம், ஒடிசா, பீகார், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் கொரோனா பரவல் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது.  மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, உ.பி. உட்பட 12 மாநிலங்களில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா சிகிச்சையில் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுதும் ஒரு 30 மாவட்டங்களில் கடந்த 2 வாரங்களாக கொரோனா விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த 30 மாவட்டங்களில் கேரளாவில் மட்டும் 10 மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது. இந்த 30-ல் 7 ஆந்திர மாவட்டங்கள், 3 கர்நாடகா மாவட்டங்கள், ஒரு தமிழ்நாடு மாவட்டம் இருக்கிறது.

இந்தியாவில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிராவில் நேற்று ஒரேநாளில் 930 பேர் கொரோனாவில் பலியாகியுள்ளனர், 57,000 பேருக்கு புதிதாகக் கொரோனா தொற்றியிருக்கிறது. மும்பையில் மட்டும் 3,879 புதிய தொற்றுக்கள், 77 மரணங்கள். புனேயில் 9,084 புதிய தொற்றுக்கள், 93 மரணங்கள் பதிவாகின. மகாராஷ்டிராவில் தற்போது 6.41 லட்சம் பேர் கொரோனா சிகிச்சையில் இருக்கின்றனர்.

கர்நாடகாவில் 50,000த்திற்கும் அதிகமானோர் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர், பெங்களூருவில் 25,000 பேருக்கு ஒரே நாளில் கொரோனா ஏற்பட்டுள்ளது.

சில நிபுணர்கள் வைரஸ் சுழற்சியில் இருக்கும் லெவலைப் பார்க்கும் போது 3ம் அலை நிச்சயம் என்று கூற வைராலஜிஸ்ட்கள் சிலர் பல்வேறு கணித மாதிரிகளை கணக்கிட்டு மே மத்தியில், மே இறுதிவாக்கில் கொரோனா தாக்கம் குறையும் என்கின்றனர்.